போலி பாஸ்போர்ட்டுடன் சினிமா உதவி இயக்குநர் மனைவி சென்னையில் கைது
சென்னை : சென்னையில் போலி பாஸ்போர்ட்டுடன் சந்தேகப்படும்படியாக நடமாடிய சினிமா உதவி இயக்குநரின் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர், முகப்பேர் 7-ஹெச் பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆணும் பெண்ணும் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒன்றாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் அவர்கள் இருவரும் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்ல ஆரம்பித்தனர். உடனே அவர்கள் மீது சந்தேகப்பட்டு போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முதலில் நண்பர்கள் என்று கூறினார்கள். பின்னர் கணவன்- மனைவி என்று மாற்றி சொன்னார்கள்.
இதனால் அவர்கள் மீது சந்தேகம் மேலும் வலுவடைந்து அந்த பெண் வைத்திருந்த கைப்பையை வாங்கி போலீசார் சோதனை போட்டனர். பைக்குள் அந்த பெண்ணின் புகைப்படம் ஒட்டிய 2 பாஸ்போர்ட்டுகள் இருந்தன. ஆனால் இரண்டிலும் வெவ்வேறு பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது.
இதனால் அந்த பெண் தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதி அவரையும் அவருடன் இருந்த ஆசாமியையும் ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோரும் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் மேரி ஏஞ்சலின் தங்கா (48) என்று தெரியவந்தது. அவருடன் வந்திருந்த நபரின் பெயர் சதீஷ்குமார் என்றும் தெரியவந்தது. சதீஷ்குமார் சினிமா உதவி இயக்குநராக பணியாற்றுவதாக தெரிவித்தார்.
மேரியிடம் கைப்பற்றிய 2 பாஸ்போர்ட்டுகளில் ஒரு பாஸ்போர்ட்டில் அவரது பெயர் மேரி ஏஞ்சலின் தங்கா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பிறந்த தேதி ஒருவிதமாக அச்சிடப்பட்டிருந்தது. இன்னொரு பாஸ்போர்ட்டில் சந்திரா என்று பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பிறந்த தேதி வேறுவிதமாக இருந்தது.
முதலில் உள்ள பாஸ்போர்ட்டில் மேரி 10-க்கும் மேற்பட்ட தடவை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது. 2 பாஸ்போர்ட்டு வாங்கியது ஏன்? என்று போலீஸார் மேரியிடம் கேட்ட போது,
எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும். எனது முதல் கணவர் பெயர் சம்பத். அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து போய் விட்டார். இதனால் சென்னை வந்த நான் சதீஷ்குமாரோடு வாழ ஆரம்பித்தேன்.
சதீஷ்குமாரும் நானும் வடபழனி, மன்னார்முதலி தெருவில் வசித்து வருகிறோம். என்னுடைய மகன் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கிறான். முதலில் இருந்த பாஸ்போர்ட்டில் எனக்கு வயது அதிகமாக இருந்ததால், குறைவான வயதை காட்டுவதற்காக பிறந்த தேதியை மாற்றிப்போட்டு 2-வது பாஸ்போர்ட்டு வாங்கும்படி திருவல்லிக்கேனியை சேர்ந்த புரோக்கர் ஒருவர் கூறினார். அவர்தான் 2-வது பாஸ்போர்ட்டையும் சந்திரா என்ற பெயரில் வாங்கிக் கொடுத்தார்.
வயது குறைத்து போட்டால் சிங்கப்பூர், மலேசியாவில் நல்ல வேலை கிடைக்கும் என்று கூறியதால் வயதை குறைத்து போட்டு 2-வது பாஸ்போர்ட்டை எடுத்தேன். தற்போது தியாகராயநகரில் ஒரு தனியார் பல்பொருள் அங்காடியில் மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். நான் தீவிரவாதி அல்ல. வேறு சட்ட விரோத செயலிலும் ஈடுபடவில்லை என்றார் மேரி..
இதையடுத்து போலீஸார் மேரியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சதீஷ்குமார் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications