இலங்கை: தமிழர் பகுதிகளில் தனியார் பேருந்துகளில் சிங்கள பாடல்கள் கட்டாயம்!
கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தி, சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நிறுத்தாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து தமிழர் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவி்ட்டதையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் சிங்கள பெயர்ப் பலகைகளை கட்டாயம் வைக்க வேண்டும், சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளை கட்டாயமாக வாடகைக்கு தர வேண்டும், சிங்களவர்களுக்கு வீடு, நிலம் விற்ற வேண்டும், தனியார் பேருந்துகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என பல்வேறு வழிகளில் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் இந்த நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
'தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
அதில், இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்தில்ள் சிக்கியுள்ளோம். நமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் ராணுவமும் நமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை கையாண்டு வருகின்றன.
இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் நமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய நம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும். அதி உச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.
எங்கள் சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை ஸ்தம்பித்துள்ள இந்த வேளையில், எங்களுடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் இருந்து நமது தாய் மண்ணையும் தாய் மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
தனியார் கட்டிடங்களிலிருந்து ராணுவம் வாபஸ்:
இந் நிலையில் யாழ்பாணத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் தனியார் கட்டிடங்களில் இருந்து சிங்கள ராணுவம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகரை 1995ம் ஆண்டு விடுதலைப் புலிகளிடமிருந்து ராணுவம் மீட்டது. அதிலிருந்து யாழ்ப்பாணம் நகரம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு தனியார் கட்டிடங்களையும் ராணுவத்தினர் ஆக்கிரமித்து, தங்கியிருந்தனர்.
புலிகளுடனான போர் முடிந்ததையடுத்து இந்தப் பகுதிகளில் ராணுவ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தனியார் கட்டிடங்களில் இருக்கும் ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications