தமிழகத்தில் திடீர் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம்- ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
இதனால் சென்னை- தென் மாவட்டங்கள் இடையிலான ரயில்கள் நடுவளியில் நிறுத்தப்பட்டன.
மேலும் மழை காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதால் சென்னை புறநகர் ரயில் போக்குவரத்தும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் முருகன்பட்டி மலைப்பகுதி வழியாக வந்த மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் தண்டவாளத்தை மூழ்கடித்தது. மேலும் பாறைகளும் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.
கொடைரோடு- அம்பாத்துரை இடையே எஸ்.புதுக்கோட்டை அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் நீரில் மூழ்கிவிட்டது. மேலும் இப் பகுதியில் உள்ள மலை குகைகளில் மழை நீர் தேங்கியது.
இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற சிறப்பு ரயில் வெள்ளத்தில் சிக்கியது.
ரயில் மேலும் இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவித்தனர். இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து திண்டுக்கல் வந்த பாசஞ்சர் ரயில் மற்றும் ஜமுதாவி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கொடைரோடு ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
மேலும் மதுரையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
அதே போல முத்துநகர், பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களும் ஆங்காங்கே வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் இன்னொரு ரயில் என்ஜின் அனுப்பப்பட்டு நடு வழியில் சிக்கிய நாகர்கோவில் சிறப்பு ரயிலை, மீண்டும் கொடைரோட்டுக்கு பின்பக்கமாக இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டது.
இந்த ரயில்கள் புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ரயில்கள் மிகத் தாமதமாக இயங்கி வருகின்றன.
மின்வெட்டால் நின்ற சென்னை மின்சார ரயில்கள்..
மேலும் பலத்த மழை காரணமாக சென்னையில் ஏற்பட்ட மின்வெட்டால் புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்கள் கொருக்குப்பேட்டடையில் நிறுத்தி வைக்கப்பட்டன.