மே தினம் - விடுமுறை அளிக்காத 52 நிறுவனம் மீது நடவடிக்கை
நெல்லை : மே தினத்தையொட்டி விடுமுறை விடாமல் தொழிலாளர்களை வேலை பார்க்க வைத்த 52 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சுடலைராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு...
மதுரை இணை ஆணையர் ஜெயசிங்கன், நெல்லை மண்டல துணை ஆணையர் சுந்தரராஜன் ஆலோசனைபடி மே தினத்தன்று நெல்லை, பாளை, மேலப்பாளையம், சங்கரன்கோவில், தென்காசி, அம்பை, ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வு நடத்தினர்.
பொதுவாக மே தினத்தன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
மாறாக அன்று பணிபுரியும் சிப்பந்திகளுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அன்று பணிபுரிய விரும்பும் சிப்பந்திகளிடம் சட்டவிதிகளின்படி கையொப்பம் பெற்று ஒரு நகலை அறிவிப்பு பலகையிலும், மற்றொரு நகலை 24 மணி நேரத்திற்கு முன்பு தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் மே 1ம் தேதி சிப்பந்திகளை பணியில் அமர்த்திய 30 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 18 உணவு நிறுவனங்கள், 4 பீடி, மற்றும் சுருட்டு தொழில் நிறுவனங்கள் ஆகிய 52 தொழில் நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்ட விதிகளின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications