பிரமாண்ட பேரணியுடன் உலகத் தமிழ் செம்மொழிமாநாடு- பிரதீபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார்
சென்னை: பிரமாண்ட பேரணியுடன் ஜூன் 23ம் தேதி கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழக அரசு 21 குழுக்களை அமைத்துள்ளது. இந்த மாநாட்டினை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஜுன் 23-ந் தேதி காலையில் தொடங்கிவைக்கிறார்.
பின்லாந்து அறிஞருக்கு கலைஞர் விருது
இந்த விழாவில், கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது', இந்திய மொழி, கலாசார அறிஞரான பின்லாந்து நாட்டை சேர்ந்த டாக்டர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதினை முதல்-அமைச்சர் கருணாநிதி தனது சொந்த நிதியில் இருந்து வழங்கிய தொகையினைக் கொண்டு, செம்மொழி தமிழ் மத்திய ஆய்வு நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிகழ்ச்சி இடம்பெறும்.
இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெறும், தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் தொடர்பான பிரமாண்டமான ஆய்வரங்கங்கள் நடைபெறும்.
ஆய்வரங்குகளில் 7000 பிரதிநிதிகள்
தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இந்த ஆய்வரங்கங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இதில் பங்கேற்பதற்கு 47 நாடுகளை சேர்ந்த 7 ஆயிரம் பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த ஆய்வரங்கத்துக்கு 55 தலைப்புகளின் கீழ் 1020 ஆய்வுக்கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. தொடக்க நிகழ்ச்சியின்போது, அமெரிக்காவின் பெர்கிலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஹாட், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இந்த ஆய்வரங்கங்களில் தமிழ் மற்றும் உலக செம்மொழிகளின் நிலை, திராவிட மொழிகளின் வரலாறு, இலக்கணம், மொழி, சிந்துசமவெளி நாகரீகம், கல்வெட்டு, சுவடிகள், நவீன இலக்கியம், நாட்டுப்புற கலைகள், தமிழ் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்களும் நடைபெறும்.
பொதுமக்களை கவரும் வகையில் இலக்கிய நிகழ்ச்சிகளும் மாநாட்டில் இடம்பெறும். இந்த பொது அரங்கத்தில், புகழ்பெற்றவர்களின் இலக்கிய சொற்பொழிவுகள், அறிஞர்களின் விவாதங்கள், கவிதை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இதில், இளம்தலைமுறையினரையும் ஈடுபடுத்துவதற்காக, அவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவிலான போட்டியும் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
கோவை மாநாட்டில் தொடக்கத்தை குறிக்கும் வகையில் 2,500 கலைஞர்களின், பிரமாண்டமான கலை மற்றும் நாட்டுப்புற கலாசார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கோவை மாநகரம் முழுவதும் நடைபெறும். மாநாடு நடைபெறு நாட்களில் நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மாலை வேளைகளில் நடத்தப்படும்.
தமிழ் கலை, கலாசாரம், மொழி, இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு ஆகியவை தொடர்பான கண்காட்சியும் நடத்தப்படும். இதில், சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட 6 தலைப்புகளின் கீழ் 30 ஸ்டால்கள் அமையவுள்ளன. ஆடியோ மற்றும் விடியோ நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய பகுதியில் இருந்து அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் மற்றும் சோழர் கால வெண்கல பொருட்கள், கல்வெட்டுகள் மற்றும் பல்வேறு கால கட்ட சிற்பங்களையும் கண்டுமகிழலாம்.
பிரமாண்ட பேரணி
மாநாடு தொடக்க நாளன்று, கோவை வ.உ.சி. திடலில் இருந்து, கொடிசியா மைதானம் வரை 9 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும். இதில், தமிழ் கலாசாரத்தின் பெருமையை விளக்கும் வகையில் ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவை 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். இந்த ஊர்வலத்தில் 40 குழுக்களை சேர்ந்த 2 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பார்கள்.
இதுதவிர இணையதளத்தில் தமிழின் பங்களிப்பை அதிகரிப்பதற்காகவும், தமிழ் பயன்பாட்டை எளிமையாக்கவும் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறும். சாதாரண மக்களும், இணையதளத்தில் தமிழ் மொழியை எளிமையாக பயன்படுத்த வசதியாக தமிழ்வழி இணையதள கண்காட்சியும் நடத்தப்படும்.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி ஜுன் 27-ந் தேதி நடைபெறும். இதில் பொதுமக்களும், அறிஞர்களும் கலந்துகொள்கிறார்கள். இதில் உலக தமிழ் செம்மொழி நினைவு தபால்தலையும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications