மரண தண்டனை-காத்திருப்போர் பட்டியலில் 30வது இடத்தில் கசாப்

பிற நாடுகளை எடுத்துக் கொண்டால், மரண தண்டனை விதிக்கப்பட்டால் உடனே அதை நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மிக மிக அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பிறகும் கூட குடியரசுத் தலைவரிடம் கருணை காட்டுமாறு கோரி விண்ணப்பிக்கலாம். அந்த மனு மீது குடியரசுத் தலைவர் முடிவு எடுத்து அறிவித்த பிறகுதான் இந்த தண்டனையில் ஒரு முடிவுக்கு வர முடியும்.
தற்போது குடியரசுத் தலைவர் முன்பு 29 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவராக பார்த்து எப்போது முடிவெடுக்கிறாரோ அப்போதுதான் அதற்கு விடிவு காலம் பிறக்கும்.
கடந்த 2001ம் ஆண்டு 33 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2007ம் ஆண்டு 100 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அப்சல் குரு, சுஷில் சர்மா, அனந்த் மோகன், சந்தோஷ் குமார் சிங் ஆகியோர்.
2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிக்கி அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி மட்டூவை கற்பழித்துக் கொன்றதற்காக சந்தோஷ்குமார் சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல பீகாரில் முன்னாள் எம்.பி. அனந்த் மோகன் ஐஏஎஸ் அதிகாரியைக் கொலை செய்த வழக்கிலும், நைனா சஹானியைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரே ஒருவர்தான் தூக்கில் போடப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிக்கிய தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி தூக்கில் போடப்பட்டார்.
அப்சல் குருவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி பாஜக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்குவோரின் பட்டியலில் கசாப் சேர்ந்துள்ளான்.












Click it and Unblock the Notifications