ஆடு, மாடுகளைப் போல பக்தர்களை நடத்தும் திருப்பதி கோவில் நிர்வாகம்- புகார்
ஹைதராபாத்: ஆடு, மாடுகளைப் போல பக்தர்களை திருப்பதி கோவில் நிர்வாகம் நடத்தி வருவதாக ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் சுபாஷன் ரெட்டியிடம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மூர்த்தி புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மூர்த்தி கொடுத்துள்ள புகாரில்,
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இங்கு தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி. பக்தர்கள் மிகவும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள்.
ஆனால் சாதாரண பக்தர்களை இங்கு கேவலமாக நடத்துகிறார்கள். ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சாமியை பார்த்து தரிசனம் செய்யும் முன்பு ஓரிரு வினாடிகளில் இழுத்து தள்ளி விடுகிறார்கள். பெண் பக்தர்கள் என்று கூட பார்ப்பதில்லை.
அதேபோல் கியூ காம்ப்ளக்சுகளில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்கிறார்கள். கூட்டம் இல்லாத நாட்களில் கூட பக்தர்களை அடைத்து வைத்து திடீரென திறந்து விடுகிறார்கள். இது பக்தர்களின் மனதை புண்படுத்துவதுபோல் உள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 22-ந்தேதிக்குள் அறிக்கை தருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவுக்கு, மனித உரிமை கமிஷன் தலைவர் சுபாஷன் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கட்டண வசூலில் மகா மோசடி
இதற்கிடையே, திருப்பதி கோவில் கட்டண வசூலில் பெருமளவில் மோசடி நடந்துள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பதி கோவிலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் வஸ்த்ர அபிஷேகம் நடக்கிறது. இந்த வஸ்த்ர அபிஷேக சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அரைமணி நேரம் சாமி தரிசனம் செய்யலாம். இந்த சேவைக்கான டிக்கெட் கட்டணம் சில வருடங்களுக்கு முன்பு ரூ.12,500 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தரிசன டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல திருப்பதி கோவிலில் தினமும் தோமாலை அர்ச்சனை சேவை நடக்கிறது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ரூ.480-க்கு விற்கப்படுகிறது.
இந்த 2 தரிசன சேவை டிக்கெட்டுகளையும் சிலர் முன்பதிவு செய்து கொண்டு கூடுதல் விலைக்கு விற்பதாக கண்காணிப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கண்காணிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.
அப்போது வஸ்த்ர அபிஷேக சேவை டிக்கெட் விற்றதில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த வஸ்த்ர அபிஷேக டிக்கெட்டுகள் வருகிற 2020-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 பேரின் பெயர்களில் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவாகி இருப்பதை பார்த்து கண்காணிப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ரூ.12500-க்கு முன்பதிவு செய்த டிக்கெட்டை பக்தர்களுக்கு ரூ.10 லட்சம் வரை விற்று லாபம் சம்பாதித்துள்ளனர்.
இதன் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள் ளது. இதே போல் ரூ.480-க்கு வாங்கிய தோமாலை சேவை டிக்கெட்டுகளை ரூ.5 ஆயிரம் வரை விற்றுள்ளனர். இந்த டிக்கெட்டுகள் 2019-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடியை தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஒவ்வொருவர் பெயரிலும் 400 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அம்பானிகள் போன்றோருக்கு மட்டும் அடிவாரத்திலிருந்து அமோக வரவேற்பு கொடுத்து அழைத்து செல்வதும், அவர்களுக்காக விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதும், அறைகளைத் தேடிச் சென்று பிரசாதம் கொடுத்து அகமகிழ்ந்தும் கொண்டிருக்கும் திருப்பதி நிர்வாகம், அப்பாவி பக்தர்களிடம் இப்படி அடாவடியாக நடந்துகொள்வது கோவிந்தனுக்கே அடுக்காது.












Click it and Unblock the Notifications