ஆட்சி மாறினால் கவர்னரை நீக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கடந்த 2004ம் ஆண்டு பாஜக எம்.பியான சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில்
மாநில கவர்னராக நியமிக்கப்படுவர்கள் பதவியில் இருக்க 5 ஆண்டு உரிமை உள்ளது. ஆனால், 2004ம் ஆண்டு பாஜக கூட்டணி அரசு போய் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களில் உடனடியாக கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இது சட்ட விரோதமானது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் கபாடியா, ரவிந்தீரன், சுதர்சன் ரெட்டி, சதாசிவம் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில்,
ஆட்சி மாறியதும் கவர்னர்களை எந்தக் காரணமும் இல்லாமல் மாற்றுவது தவறு. காரணமில்லாமல் எந்த கவர்னராவது மாற்றப்பட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட உரிமை உள்ளது.
கவர்னர்களை இஷ்டத்துக்கு மாற்ற மத்திய அரசுக்கு உரிமை இல்லை. மிக கட்டாயமான காரணங்கள் குறிப்பாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலோ, நடத்தை சரி இல்லாவிட்டாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலோ மட்டும் தான் கவர்னரை மாற்ற முடியும். ஆட்சி மாறியதும் காரணமே இல்லாமல் கவர்னர்களை மாற்றகூடாது.
கவர்னரை நியமிப்பது ஜனாதிபதி தான் என்றாலும், புதிதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்கு ஒத்து வர மாட்டார் என்பதற்காக கவர்னரை தூக்கி அடிப்பது தவறு என்று தீர்ப்பளி்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனு தாரருக்காக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி ஆஜரானார்.
அவர் வாதாடுகையில், ஆட்சி மாற்றத்திற்கு அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள் பலி கடா ஆக்கப்படக் கூடாது, அவர்கள் அந்தப் பதவிக்குரிய கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். கவர்னர்களின் பதவிக்கு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்க வேண்டும். ஒருவேளை ஆளுநரை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு சரியான காரணத்தை ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications