இது தான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாடு-சுப.வீரபாண்டியன்

அவர் கூறியுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் இந்தியாவில் நுழைவதற்கு உள்ள தடையை நீக்கி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமிழகம் வர அவரை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதன் மூலம், சட்டமன்றத்தில் தான் கூறிய உறுதிமொழியை நம் முதல்வர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.
அத்தோடு நிற்காமல் அவருடைய சிகிச்சைக்கான முழு ஏற்பாடுகளையும் அரசே செய்யும் எனவும், செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
பார்வதி அம்மையார் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் முன்வந்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதியையும் துணை முதல்வர் ஸ்டாலினையும் தமிழக அரசையும் திராவிட இயக்க தமிழர் பேரவை நெஞ்சாரப் பாராட்டித் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பிரபாகரனின் பெற்றோர் இந்திய மண்ணில் கால் வைக்கவே அனுமதிக்கக் கூடாது, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், அவர் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு, அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ள இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை தமிழின உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோர் இப்போதேனும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications