ஒகேனக்கல் திட்டம்: கருணாநிதி-எதியூரப்பா சென்னையில் பேச்சு
பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதிக்குள் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் சென்னையில் சந்தித்து பேச்சு நடத்தவுள்தாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறியுள்ளார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க காவிரியில் இருந்து நீரை எடுத்து பயன்படுத்தும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.
ஆனால், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் இடம் கர்நாடகத்துக்கு சொந்தமானது என்று கன்னட அமைப்புகள் போர்க் கொடி தூக்கியுள்ளன. மேலும தொடக்கத்தில் வரையறுக்கப்பட்டதை விட கூடுதலாக காவிரி நீரை எடுக்க தமிழக அரசு முயற்சிப்பதாகவும் கர்நாடக அரசு குற்றம் சாட்டுகிறது.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமைச்சர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
இந்தப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இரு மாநிலங்களும் முடிவு செய்துள்ளன. இதற்காக கர்நாடக முதல்வர் எதியூரப்பா சென்னை செல்வார். அங்கு தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசுவார்.
ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் இந்த பேச்சுவார்த்தை நடக்கும். அதற்கு முன் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் சந்தித்து பேசுவார்கள். இந்த சந்திப்பு இந்த மாத இறுதியில் நடக்கும்.
ஒகேனக்கல் எல்லைப் பிரச்சனை, பயன்படுத்தப்படும் நீரின் அளவு ஆகியவை குறித்து பேசப்படும். கர்நாடகத்தின் மின்சார தேவையை உணர்ந்து, சிவனசமுத்திரத்தில் நீர் மின்சார திட்டம் அமைக்க தமிழக அரசின் ஒப்புதல் பெறுவது குறித்தும் பேசப்படும் என்றார்.