கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் தஹிளியானிக்கு பதவி உயர்வு
மும்பை: மும்பை தீவிரவாத் தாக்குதல் வழக்கில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி தஹிளியானிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கை விசாரிக்க ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் தனி கோர்ட் அமைக்கப்பட்டது. இதன் மாஜிஸ்திரேட் ஆக தஹிளியானி செயல்பட்டு வந்தார்.
வழக்கு முடிவடைந்து 7ம் தேதியன்று தீர்ப்பு வழங்கினார் தஹிளியானி. அதில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.
இந் நிலையில் மாஜிஸ்திரேட் தஹிளியானிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிட்டி சிவில் மற்றும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் தண்டனைக்கும் பதவி உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வழக்கமான பதவி உயர்வு வந்த நேரத்தில் கசாப் வழக்கும் முடிந்து தீர்ப்பும் அளிக்கும் சூழல் உருவாகிவிட்டது.
கசாப்பை என் கையால் தூக்கில் போடனும்...
இந் நிலையில் கசாப்பை தூக்கில் போடுவதற்கு உத்தரப் பிரதேச சிறை ஊழியர் ஒருவர் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
மீரட் சிறையில் மரண தண்டனை கைதிகளை தூக்கில் போடும் ஊழியராக பணியாற்றி வரும் மம்மு சிங் (65) தான் இந்த ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
அஜ்மல் கசாப்பை மீரட் ஜெயிலில் என் கைகளால் தூக்கில் போட வாய்ப்பு கிடைத்தால் அதை பெருமையாக கருதுவேன். ஆனால் சட்ட நடவடிக்கைகள் முடிய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை எனது மகன் பவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவன் அந்த பணியை நிறைவேற்றுவான் என்றார் மம்மு சிங்.
மம்முசிங்கின் குடும்பமே மரண தண்டனை கைதிகளை தூக்கில் போடும் பணியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறதாம். இவருடைய தாத்தா லட்சுமண் மஜீரா ஆங்கிலேயர் காலத்தில் இந்த வேலையை செய்து வந்தார்.
இவருடைய அப்பா கல்லு சிங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலையாளியை தூக்கில் போட்டவர். அவரைத் தொடர்ந்து இந்த வேலைக்கு வந்த மம்மு சிங் இப்போது தனது மகன் பவனுக்கு (42) பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் பதுவன் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் அசோக்குமார் என்பவர் கசாப்பை தூக்கில் போடும் வாய்ப்பை தனக்கு தர வேண்டும் என்று கோரி ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.












Click it and Unblock the Notifications