சென்னையில் நடந்த 40 கொள்ளைகள்-11 பேர் கைது
சென்னை: சென்னை நகரில் 40 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி போன்ற பல்வேறு புறநகர் பகுதிகளில் நடைபெற்ற 40 சம்பவங்களில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 175 பவுன் தங்க நகைகள், செல்போன்கள், கார், இரு சக்கர வாகனம் மற்றும் ரூ. 8 லட்சம் பணம் ஆகியவற்றை இன்று உரியவர்களிடம் ஒப்படைத்த பின் நிருபர்களிடம் ஜாங்கிட் பேசுகையில்,
அண்மையில் பள்ளிக்கரணையில் தனியாக இருந்த புஷ்பா என்ற கணிப்பொறி பொறியாளரை கட்டிப்போட்டு விட்டு 18 சவரன் நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவசூரியன் (47), கணபதி (53), சுதாகர் (33), சதீஷ் (21) என்ற அந்த 4 பேர் கும்பல் மெளண்ட் ரோடு மற்றும ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற வழிப்பறிச் சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற 40 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளோம்.
புறநகர் பகுதியில் கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூந்தமல்லியில் அண்மையில் நடைபெற்ற ரவுடி சின்னா மற்றும அவருடைய வக்கீல் பகத்சிங் ஆகிய இருவரும் கொலை செய்யப்ட்ட வழக்கில் மொத்தம் 21 பேருக்கு தொடர்புள்ளதை கண்டுபிடித்துள்ளோம்.
அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கூலிப்படையினர் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 17 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார் ஜாங்கிட்.
டிராபிக் போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை:
இந் நிலையில் டிராபிக் போலீசார் போல் நடித்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டை நடத்திய நபரை கல்லூரி மாணவர்களின் உதவியால் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் டிராபிக் போலீஸ் போல் உடையணிந்து நபர் ஒருவர் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து ஓட்டுநர்களிடம் வாகனத்தின் ஆவணங்களை கேட்டு மிரட்டி வசூல் வேட்டையை நடத்தி வந்தார்.
நேற்று கல்லூரி மாணவர்களான வெங்கடேசன், ஆனந்த்குமார் ஆகியோர் அந்த வழியே அவர்களை வழிமறித்த அந்த நபர் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டார்.
அவர்கள் சரியான ஆவணங்களை காட்டிய பின்னரும் பணம் கேட்டு மிரட்டினார்.
இதையடுத்து சந்தேகமடைந்த மாணவர்கள் அந்த நபரிடம் விவரம் கேட்டனர். தான் குமரன் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றுவதாகவும், பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் திருடப்பட்டு வருவதாக கிண்டி போலீசார் தகவல் தந்துள்ளதாகவும், அதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் திருட்டு வாகனங்களா என்று சோதனை செய்து வருவதாகவும் கூறினார்.
அப்போது பல்லாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அந்த வழியே சென்றார். அவரிடம் இந்த நபர் குறித்து மாணவர்கள் தகவல் தந்தனர்.
அவர் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் போலி டிராபிக் போலீஸ் ாசாமியை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த செந்தில் (25) என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications