அறுக்க தெரியாதவனுக்கு 62 அரிவாள் எதுக்கு – சட்டமேலவை உருவாக்கம் குறித்து தா.பாண்டியன் கிண்டல்
நெல்லை: அறுக்க தெரியாதவனுக்கு 62 அரிவாள் எதற்கு என புதிய சட்ட மேலவை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில்,
அகில இந்திய அளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசில் வருவாய் அதிகரித்தும் பொருளாதார கொள்கைகளினால் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை.
கிரிக்கெட் போட்டி, ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு சந்தை உள்பட பல்வேறு புகார்களில் மத்திய அமைச்சர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களால் தமிழகத்திற்கு அவப்பெயர் கிடைத்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை, காவிரி நதி நீர் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழகத்திற்கு சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை.
ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் சட்டசபையையே ஓழுங்காக நடத்த முடியாத சூழ்நிலையில் இரண்டாவது அவையான மேலவை தேவையில்லை. அறுக்க தெரியாதவனுக்கு 62 அரிவாள் எதற்கு என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து இடதுசாரி கட்சிகள் விரைவில் கூடி முடிவு செய்யும். வரும் சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது அப்போதைய நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
உலக தமிழர்கள் அங்கீகாரத்தை இ.கம்யூ பெற்றுள்ளது. பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சென்னையில் சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்காத சூழ்நிலையி்ல் திருப்பதியில் ராஜபக்சேக்வுக்கு வரவேற்பு அளிப்பது கண்டனத்துக்குரியது என்றார்.