என் கட்சியில் சேர அமிதாப், ஜெயா பச்சனை அழைக்க மாட்டேன்- அமர்சிங்
லக்னோ: எனது லோக் மன்ச் அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாகும். அப்போது எனது கட்சியில் சேருமாறு அமிதாப் பச்சனையோ அல்லது அவரது மனைவி ஜெயா பச்சனையோ நான் அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் யாராலும் சீந்தப்படாமல் இருக்கும் அமர்சிங்.
சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர்சிங் எங்கு போவதென்று தெரியாமல் உள்ளார். யாரும் அவரைக் கூப்பிடுவதாகவும் தெரியவில்லை. அவருடன் சேர்த்து கட்சியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்ட ஜெயப்பிரதாவும், எங்கு போவதென்று தெரியாமல் தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கே திரும்பி தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாக ஆயத்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் தான் நடத்தி வரும் லோக் மன்ச் அமைப்பை 2012ம் ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டசபைத் தேர்தலின்போது அரசியல் கட்சியாக்க முடிவு செய்துள்ளாராம் அமர்சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாகும். இருப்பினும் அதில் சேருமாறு அமிதாப்பையோ, ஜெயா பச்சனையோ நான் அழைக்க மாட்டேன்.
முதலில் அமிதாப் பச்சனுக்கு அரசியலில் ஆர்வமே இல்லை. பிறகு எப்படி நான் அவரை அழைக்க முடியும். அதேபோல, ஜெயா பச்சனை தொந்தரவு செய்யவும் நான் விரும்பவில்லை.
நான் கிழக்கு உத்தரபிரதேசம் மாநிலம் முழுவதும் ரத யாத்திரை செல்ல இருக்கிறேன். உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியை பிரித்து பூர்வாஞ்சல் மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த யாத்திரை மேற்கொள்வேன்.
பூர்வாஞ்சல் மாநிலம் உருவாவதற்கு மக்களின் ஆதரவு திரட்ட யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. யாத்திரையில் நடிகர்கள் சஞ்சய்தத், மனோஜ் திவாரி, நடிகை ஜெயபிரதா ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications