தலித் சுடுகாட்டை மீட்டுத்தர முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள சோரிஸ்புரம் தலித் மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி மீட்டுத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். அதன் விவரம் :
தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பு ஊராட்சி சோரிஸ்புரம் பகுதியில் 170 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியைச் சேர்ந்த பாளையங்கோட்டை சாலை அருகே உள்ள பக்கிள் ஓடை புறம் போக்கு நிலத்தை கடந்த 75 வருடங்களாக தலித் மக்களின் மயானத்திற்காக சுமார் 1 ஏக்கர் இடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சோரிஸ் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு தாரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் மயானத்தை ஆக்கிரமித்து, வேலி போட்டு அடைத்துள்ளனர்.
இதனால் மயானமும் அதற்குரிய பாதையும் அடைபட்டு, சோரிஸ்புரம் தலித் மக்கள் மயானம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் தவிக்கின்றனர். இந்த செயல் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் புறம்பானது ஆகும்.
இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இம் மக்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், இதுவரை இந்த மயானம் மீட்கப்படவில்லை.
எனவே, தாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு தலித் மக்கள் பயன்படுத்தம் சுடுகாட்டை மீட்டுத்தருமாறு வேண்டுகின்றேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications