Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசமான விமர்சனம் கூடாது: அதிமுகவுக்கு கருணாநிதி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மோசமான விமர்சனங்கள் கூடாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை தரமணி அருகே தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பான அதிமுக சார்பல் இன்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சில குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.

அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டுப் பேசியதாவது:

என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அப்போது அமைச்சராக இருந்த குழந்தைவேலு , கருணாநிதி தேனிக்கு பக்கத்திலே உள்ள முத்துத்தேவன்பட்டியிலே ஒரு தோட்டம் வாங்கியிருக்கிறார் என்று என்மீது ஒரு குற்றத்தை சுமத்தினார்.

அப்போது பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போதே நான் பிரச்சாரக் கூட்டங்களிலே, தேர்தல் பணிக்காக நான் தங்கியிருக்கின்ற இடம் என்னுடைய இடமும் அல்ல, நான் வாங்கியிருக்கின்ற தோட்டமும் அல்ல. அது திமுகவைச் சார்ந்த இன்றைக்கு இங்கே எம்எல்ஏவாக இருக்கிற தம்பி ராமகிருஷ்ணனின் அண்ணனின் தோட்டம். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி பார்த்தேன்.

அதற்கு பிறகும், இல்லை இல்லை கருணாநிதி தோட்டம் வாங்கியிருக்கிறார் முத்துதேவன்பட்டியில், இத்தனை லட்சம் ரூபாய் பொறுமானமுள்ள தோட்டம் என்று சொல்லப்பட்டது. ஆதாரம் எங்கே? என்று கேட்டேன். ஆதாரத்தைச் சட்டசபையிலே தருகிறேன் என்று சொன்னார்.

பின்னர் இந்த விவாதம் சட்டமன்றத்தில் வந்தது. அப்போது நம்முடைய துரைமுருகன் அந்த அமைச்சரை பார்த்து நீங்கள் சொல்வது தவறு, முத்துதேவன்பட்டியிலே கருணாநிதி நிலம் வாங்கியிருந்தால், தோட்டம் வாங்கியிருந்தால் அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டார்.
நான் ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன். நிரூபிக்காவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று சொன்னார்.

அழுத்தத்திருத்தமான அந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டு, நானும் எழுந்து நான் இதுவரையிலே பேசாமல் இருந்தேன். காரணம், முதல்வர் எம்.ஜி.ஆர். உண்மையை புரிந்து கொண்டிருப்பார் என்று கருதி மௌனமாக இருந்தேன்.
அதையும் மீறி அமைச்சர் குழந்தைவேலு பேசுகின்ற காரணத்தால், இப்பொழுது சொல்கிறேன். முத்துதேவன்பட்டியிலே எனக்கு எந்த தோட்டமும் இல்லை, துரவும் இல்லை. எந்த நிலமும் இல்லை. அவருடைய அறைகூவலை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் அதை நிரூபித்தால், நான் எம்.எல்.ஏ. பதவியை மாத்திரமல்ல, பொது வாழ்விலிருந்தே விலகிக் கொள்கிறேன். ஆனால் குறைந்தபட்சம் அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா? என்று கேட்டேன்.

விலகுத் தயார் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுடையே முன்னிலைலேயே அவர் சொன்னார். அப்போது அவைத் தலைவராக ராஜாராம் இருந்தார்கள். ஒரு வாரத்தில் அதனை நிரூபிக்கிறேன் என்று குழந்தைவேலு சொன்னார்.

ஒரு வாரம் கழித்து, நான் தினம் தினம் எழுந்து, ஆதாரம் எங்கே? ஆதாரம் எங்கே? என்று கேட்பேன். நாளைக்கு, நாளைக்கு என்றார். ஒரு வாரம் கழித்து, ஆதாரத்தை கொண்டு வந்து சட்டசபையிலே கொடுத்தார்.

வாங்கிப் பார்த்தால் போலிக் கையெழுத்து. என்னுடைய மகன் அழகிரி பெயரால் அந்த இடத்தை வாங்கியிருப்பதாக அதிலே காட்டப்பட்டு, அமைச்சர் குழந்தைவேலு கையெழுத்திட்டு, அதை நான் வாங்கியது போல ஒரு நாடகம் ஆடி, ஒரு பத்திரத்தை கொடுத்தார். சபாநாயகராக இருந்த ராஜாராம் எதிர்க்கட்சி, தோழமைக்கட்சி, எல்லா கட்சி தலைவர்களையும் அழைத்து, அவரது அறையிலே உட்கார வைத்து, அந்த ஆதாரத்தைக் காட்டி, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

ராஜாராம் அப்போது அதிமுக சார்பாக சபாநாயகராக இருந்தார். எல்லோரும் அதை பார்த்துவிட்டு, ஆதாரம் இல்லை, இது தவறான குற்றச்சாட்டு என்று சொன்னார்கள்.

எனவே, குழந்தைவேலு தன்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா என்று நான் அவரை பார்த்து கேட்டேன். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் புன்னகை பூத்த முகத்துடன் இத்துடன் இந்தப் பிரச்சனையை விட்டு விடுங்கள் என்று என்னை கேட்டுக் கொண்டார். நானும் அதனை ஏற்று விட்டு விட்டேன்.

அதேபோல ஆதாரமற்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இங்கே வாதிடுகிறார். நேற்று இந்த பிரச்சனை தொடர்பாக வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் என்னென்ன பேசினார்கள்? எப்படியெல்லாம் பேசினார்கள்? என்பதை வெளியே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பத்திரிகைகளிடம் போய் மோசமான வார்த்தைகளில் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் இவ்வளவு மோசமான விமர்சனங்கள் தேவையா என்பதை நினைத்து பார்த்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேச வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.

முதல்வரின் பதிலுரையைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ அரி எழுந்து கூச்சலிட்டார்.

அப்போது முதல்வர் பேசுகையில், நண்பர் அரியைப் பற்றி அவருடைய கட்சியிலே என்ன அபிப்ராயம் உள்ளது என்பது எனக்குத் தெரியும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+