சர்வதேச கச்சா விலை நிலவரப்படி இனி பெட்ரோல்- டீசல் விலை!?

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணைவிலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப அவ்வபோது மாற்றி விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அமைத்த கிரித் பாரிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அமலாக்க திட்டமிட்டது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது மட்டும் உற்பத்தி வரி விதிக்கப்பட்டது.
இந் நிலையில் பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்குவது குறித்து வரும் 21ம் தேதி கூட்டம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர் மட்டக் கூட்டம் நடக்கிறது.
இதில் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளிதியோரா, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், ரசாயனம்
மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அதில், பெட்ரோல்- டீசல் மீதான விலை கட்டுப்பாடுகளை தளர்த்தி, சர்வதேச அளவி்ல் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலையின் அடிப்படையில் இவற்றின் விலையை நிர்ணயிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதே போல சமையல் எரிவாயு, மண்ணெண்ணைக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதால் தான் அவற்றின் விலைகள் மிகவும் குறைவாக உள்ளன. விலையை குறைத்து விற்பதால் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் சராசரியாக ரூ. 272.50 கோடி. நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டின் இறுதியில் இந்த நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ரூ. 90,150 கோடியாக உயரும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்தும் உயர் மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் போல சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை நிர்ணயித்தால் இவற்றின் விலை 2 மடங்காகிவிடும்.இதனால் மக்களின் பெரும் அதிருப்தியை சந்தித்து ஓட்டுக்களை இழக்க வேண்டி வரும் என்பதால் அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தாது என்று தெரிகிறது.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விஷயத்தில் இனியும் விலையை கட்டுப்படுத்தி வைத்து நஷ்டத்தை சந்திக்க மத்திய அரசு தயாராக இல்லை என்று தெரிகிறது.
இதனால் பாரிக் கமிட்டி பரிந்துரைகளை அமலாக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடனும் காங்கிரஸ் ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications