பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி வரவில்லை-கருணாநிதி

நிபந்தனைகளுடன் தான் இந்தியாவின் சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு கூறியதை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் கழிப்பதற்காக அவர் மலேசியாவில் இருந்து நேற்று யாழ்ப்பாணம் கிளம்பிவிட்டார்.
இந் நிலையில் இன்று இது குறித்து சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) பிரச்சனை எழுப்பினார்.
அவர் கூறுகையில், பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதித்திருப்பதாக முதல்வர் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால் தேவையற்ற நிபந்தனை விதித்து இருப்பதாகவும், எனவே சிகிச்சை பெற அவர் தமிழ்நாட்டுக்கு வர விரும்பவில்லை என்றும், அவர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு சென்று விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
முதல்வர் டெல்லி சென்றபோது மனிதாபிமானத்துடன் பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். ஆனால் இப்போது அவர் தமிழகம் வர மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து தகவல் எதுவும் முதல்வருக்கு வந்துள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
பீட்டர் அல்போன்ஸ் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சனை, அவர் பத்திரிகைகளிலே படித்துத் தெரிந்து கொண்டதாகச் சொல்லப்படுகின்ற ஒரு செய்தியே தவிர, அதிகாரப்பூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ- பார்வதி அம்மையாரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இந்த அரசுக்கு வரவில்லை. உங்களுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள இயலாது என்ற கருத்து அமைந்த கடிதம் அவரால் அனுப்பப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால், எந்தக் கடுமையான நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்படவில்லை. அவர் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். பாதுகாப்பு என்றால் சிறைக்கோட்டம் போன்ற பாதுகாப்பு அல்ல.
போஷாக்கில், ஒருவர் உடல் நலம் இல்லாமல் வரும்போது, அவரைக் காப்பாற்ற, அவருக்குப் பரிந்து பணிவிடைகள் செய்ய, மருந்து அளிக்க தக்க டாக்டர்களிடத்திலே அவரது உடலைப் பரிசோதிக்க ஏற்றவொரு மருத்துவமனையிலே அவரைத் தங்க வைத்து, அடிக்கடி கவனித்துக் கொள்கின்ற அந்த முயற்சிகளை மேற்கொள்ள அரசின் பாதுகாப்பிலே இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டதே தவிர, கடுமையான நிபந்தனைகள் எதுவும் அவருக்கு விதிக்கப்படவில்லை.
ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு கொள்ளவோ, தொடர்பு உள்ளவர்களோடு நட்பு கொள்ளவோ கூடாது என்பதுதான் நிபந்தனை.
தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு ஒரு பிரதானமான, விளம்பரம் பெற்ற, மிக முக்கியமான ஒரு பிரமுகருடைய தாயார் இங்கே வந்து தங்கியிருக்கும்போது, அவரை பயன்படுத்திக்கொண்டு இங்கே அரசியல் யாரும் நடத்துவதற்கு இடம் தராத வகையிலேதான், இந்த அரசு அத்தகைய நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் போச்சு, இல்லாவிட்டால் உங்களை இங்கே அனுமதிக்க முடியாது என்று கூடச் சொல்லவில்லை.
அவர்களுக்கு ஒரு 'அட்வைஸ்' என்பதைப்போல, நீங்கள் இங்கே வந்து தங்குங்கள், சிகிச்சை பெறுங்கள். தகுந்த மருத்துவமனையிலே உங்களை அனுமதித்து, திறமையான டாக்டர்கள் மூலமாக உங்களுடைய உடல்நிலையைப் பரிசோதித்து ஏற்ற வைத்தியங்களைச் செய்கிறோம்.
ஆனால், அந்த நேரத்திலே உங்களை வைத்து யாராவது அரசியல் நடத்த விரும்பினால், அதற்கு நீங்கள் இடம் தரக்கூடாது என்று கனிவோடு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அறிவுரை என்று சொல்ல முடியாது. வேண்டுகோள் விடுத்து அவர்களை இங்கே அனுமதிக்கத் தடையில்லை என்று மத்திய அரசு, மாநில அரசுக்குத் தெரிவித்திருக்கிறது.
மாநில அரசும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, பீட்டர் அல்போன்ஸ் சொல்கின்ற இந்தச் செய்தி பத்திரிகைகளிலே வந்திருக்கிறது.
ஒரு காலம் இருந்தது. கிராமப் புறங்களிலே ஒரு செய்தியைப் பத்திரிகைகளிலே படித்து விட்டுச்சொன்னால், அப்பொழுதெல்லாம் அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்பார்கள். பத்திரிகைகளிலே வந்திருக்கிறது என்று சொன்னால், அப்படியா! பத்திரிகைகளிலேயே வந்துவிட்டதா? என்று அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வரும்.
இந்தக் காலத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன என்று சொன்னால், பத்திரிகைகளில்தானே செய்தி வந்திருக்கிறது என்று சொல்கின்ற அளவிற்கு பத்திரிகைச் செய்திகளாகி விட்ட இந்தக் காலத்தில் பார்வதி அம்மையாருடைய திட்டவட்டமான பதில் வரும் வரையில், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் இதனை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications