உங்களுக்கு தேர்தல் நேரத்தில்தான் எம்.ஜி.ஆர். நினைவுக்கு வருவார்: பரிதி
சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்ஜிஆரின் நினைவிடத்தை தமிழக அரசு சரியாக பராமரிக்கவில்லை என்று சட்டசபையில் அதிமுக குற்றம் சாட்டியது.
சட்டசபையில் செய்தி, விளம்பரத்துறை மானியக் கோரிக்கைள் மீது நடந்த விவாதம்:
குணசேகரன் (அதிமுக): சென்னையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த நினைவிடம் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் கூட அந்த நினைவிடத்தில் மின் விளக்குகள் எரியாமலும், குப்பைகள் அள்ளப்படாமலும் இருந்தது. இது நெஞ்சில் ஈட்டியைப் பாய்ந்தது போல் உள்ளது.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: எம்.ஜி.ஆர். பயன்படுத்தி வந்த பொருட்களை வைத்து நினைவகம் அமைக்க 2003ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி, கட்டிடம் கட்டப்பட்டும், அதை திறந்து வைக்கும் மனநிலை உங்களுக்கு வரவில்லை. அந்த இடத்துக்கு போயிருக்கக் கூட வேண்டியதில்லை. கோட்டையில் இருந்தபடியே பொத்தானை அமுக்கி தொடங்கி வைத்திருக்கலாம். உங்களுக்கு தேர்தல் நேரத்தில்தான் எம்.ஜி.ஆர். நினைவுக்கு வருவார்.
செங்கோட்டையன் (அதிமுக): போன ஆண்டு கூட இதையே பேசினீர்கள். சுனாமி வந்ததால்தான் அது திறக்க முடியாமல் போயிற்று.
அமைச்சர் பரிதி: சுனாமி வந்தது டிசம்பர் 2004ம் ஆண்டில். 2006 மே மாதத்தில்தான் ஆட்சியை விட்டு இறங்கினீர்கள். நீங்கள் மனம் வைத்திருந்தால் அந்த 2 ஆண்டு காலத்தில் அதைத் திறந்திருக்கலாம். தேர்தல் வந்தால்தான் எம்.ஜி.ஆர். உங்களுக்கு நினைவுக்கு வருவார்.
கை உயர்த்தாத எம்எல்ஏ-சபாநாயகர் எச்சரிக்கை:
இந் நிலையில் மானிய கோரிக்கையின்போது வெட்டுத் தீர்மானம் கொடுத்திருக்கும் உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் வாசிப்பார். அப்போது உறுப்பினர்கள் கையை உயர்த்தி தாங்கள் சபையில் இருப்பதை தெரிவிக்க வேண்டும் என்பது விதி.
உறுப்பினர்கள் கையை உயர்த்தினால் சபையில் இருந்ததாக சபாநாயகர் குறித்துக் கொள்வார். இல்லாவிட்டால் இருக்கையில் இல்லை என்று அறிவிப்பார்.
இவ்வாறு நேற்று சட்டசபையில் உறுப்பினர்கள் கொண்டுவந்த வெட்டு தீர்மானங்களை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார். அப்போது உறுப்பினர்களின் பெயரை வாசித்ததும் அவர்கள் ஒவ்வொருவராக கையை உயர்த்தினார்கள்.
அதிமுக உறுப்பினர் செ.மா.வேலுச்சாமி பெயரை வாசித்தபோது, கையை உயர்த்தாமல் அமர்ந்திருந்தார்.
இதை கவனித்த சபாநாயகர் ஆவுடையப்பன், கையை உயர்த்தாவிட்டால் சபையில் இருந்ததாக எடுத்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். இதன் பின் அவர் கையை உயர்த்தினார்.
கூப்பிட்ட சபாநாயகர்-தயங்கிய செங்கோட்டையன்:
இதையடுத்து சபாநாயகர், செங்கோட்டையனைப் பார்த்து அதிமுக கொறடா என்னிடம் வாருங்கள் என்று அழைத்தார். ஆனால், சபாநாயகர் இருக்கைக்கு செல்ல செங்கோட்டையன் சற்று தயங்கினார். உடனே சபாநாயகர், ஒரு விஷயம் கேட்கத்தான் கூப்பிடுகிறேன் என்று கூறி மீண்டும் அழைத்தார். இதன் பின்பு சபாநாயகரின் இருக்கைக்கு செங்கோட்டையன் சென்றார்.
அவரிடம் சபாநாயகர் ஏதோ விளக்கம் கேட்டார். இதன் பின் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.












Click it and Unblock the Notifications