பத்திரிகையாளர்களுக்கும் 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'!
சென்னை: பத்திரிகையாளர்களையும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்டந்தோறும் நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் பரிதி இளம்வழுதி பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:
பத்திரிகையாளர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ள பத்திரிகையாளர் அனைவரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான 'கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்' உறுப்பினராகச் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு அதிகமாக பெறும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் புதியத் திட்டம் செயல்படுத்தப்படும். 67: 33 என்கிற விகித அடிப்படையில் அரசும் பத்திரிக்கையாளரும் மருத்துவக் காப்பீட்டுப் பிரிமியம் தொகை செலுத்தும் திட்டம் உருவாக்கப்படும்.
அரசு செலுத்தும் 67 சதவீதத்துக்குத் தேவையான தொகை முதல்கட்டமாக பத்திரிகையாளர் நல நிதியத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1 கோடியில் இருந்தும் மற்றும் அதன் வட்டியில் இருந்தும் செலுத்தப்படும்.
எஞ்சியுள்ள 33 சதவீத தொகையினை, ஊடகப் பிரதிநிதிகளோ அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் சங்கங்களோ செலுத்த விருப்பம் தெரிவித்தால் இதற்கான திட்டம் உருவாக்கப்படும்.
சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் 300 பேருக்கு மட்டும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் கூடுதலாக 202 பேருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சென்னையில் பணிபுரியும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இதேபோன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பணிபுரியும் தகுதி வாய்ந்த 500 தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்றார் பரிதி இளம்வழுதி.












Click it and Unblock the Notifications