சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ. 7 லட்சம்

சட்டசபையில் இன்று இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் கடை வீதி பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் வேளையில் ஏற்பட்ட பிரச்சனையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது 5 பேர் தாங்கள் பணம் எடுக்க வேண்டும் என்று காவலர் ராஜேந்திரனை கேட்க, தற்போது பணம் நிரப்பிக் கொண்டு இருப்பதால் உங்களை அனுமதிக்க முடியாது என்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் 5 பேர் ஏடிஎம் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது மக்கள் கூட்டமும் கூடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் எப்போதும் நடப்பது இல்லை.
ஒரு சில அவசரக்காரர்கள், முன் கோபிகள் கையிலே துப்பாக்கி கிடைக்கும்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று விடுகிறது. இதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.
ஏடிஎம் காவலர் ராஜேந்திரன் மக்களை பார்த்து மிரட்டிய நிலையில் பொது மக்கள் அவரை ஏடிஎம் மையத்தில் தள்ளி அடைத்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஏடிஎம் காவலர் ராஜேந்திரன் கையிலிருந்த துப்பாக்கியை பறித்தபோது அவரை வாகனத்தில் ஏற்ற முயன்றபோது மக்கள் காவலருக்கு எதிராக கோஷம் போட்டனர்.
இந்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் இருந்த துப்பாக்கியை ராஜேந்திரன் பறித்து சப்-இன்ஸ்பெக்டரை சுட்டு இருக்கிறார்.
உடனே போலீசார் ராஜேந்திரனை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தை பாபநாசம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் வழியிலேயே இறந்து விட்ட தகவலை தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த 5 பேர் தஞ்சை அரசு பொது மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட்டாட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவலர் ராஜேந்திரன் மீது 302,307 உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்ப திவு செய்யப்பட்டு தஞ்சை ஊரக காவல்துறை கண்காணிப்பாளர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சம்பவத்தில் மரணமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் குடும்பத்துக்கு அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடமையாற்றும்போது மரணமடையும் காவலர் குடும்பத்துக்கு அரசு வழங்கும் ரூ.5 லட்சம் நிதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிதியும் என மொத்தம் ரூ.7 லட்சம் நிதி சப்இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு வழங்கப்படும்.
மரணமடைந்த சப்இன்ஸ்பெக்டர் சம்பளம், அவர் ஓய்வு பெறும் காலம் வரையிலும் முழு ஊதியமாக அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும்.
அவருடைய வாரிசுக்கு கல்வி தகுதியை பொறுத்து முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் மாவட்ட கலெக்டர் மூலம் விசாரித்து அந்த குடும்பத்துக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றார்.
தவறுதலாக குண்டு பாய்ந்தது-வாட்ச்மேன் வாக்குமூலம்:
இந் நிலையில் வாட்ச்மேன் ராஜேந்திரன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,
ஏ.டி.எம். மையத்தில் பணம் வைப்பதற்காக வேனில் லட்சக்கணக்கான பணம் எடுத்து வந்தோம். ஏ.டி.எம். வரும்போது தகராறு நடந்து கொண்டிருந்ததால் பணம் கொள்ளை போய் விடக்கூடாது என்பதற்காக துப்பாக்கியால் சுட்டேன். அதில் 5 பேர் மீது குண்டு பாய்ந்து விட்டது.
உடனே என்னை தாக்க ஒரு கும்பல் ஓடி வந்தது. இதனால் ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ஷட்டரை மூடிவிட்டேன். சிறிது நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வந்து கதவை திறக்கும்படி கூறினார். கதவை திறந்ததும் அவர் என்னிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி கொண்டார். அவர் என்னை அழைத்து வெளியே வந்தபோது என்னைக் கொல்ல ஒரு கும்பல் பாய்ந்தது.
என் உயிரை காப்பாற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் பிடுங்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக சப்-இன்ஸ்பெக்டர் மீதே குண்டு பாய்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications