எகிப்து நாட்டில் 52 கொத்தடிமை தமிழர்கள்-மீட்குமாறு அழகிரியிடம் கோரிக்கை!

கரூர் மாவட்டம் மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர், எகிப்து நாட்டில் டெல்டா பேக் அண்டு டெல்டா பிளாஸ்ட் என்ற நிறுவனத்தில் மாதம் ரூ. 25,000 சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அசோக் நகரைச் சேர்ந்த கணேசனிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி கணேசனும், திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்த பாலமுருகனும் (38) தலா ரூ. 50,000த்தை ரவியிடம் விசா, டிக்கெட் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இரண்டு ஆண்டுகள் பணி ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கணேசனும், பாலமுருகனும் எகிப்து சென்றனர்.
எகிப்து நாட்டில் அக்டோபர் சிட்டி என்ற ஊரில் உள்ள டெல்டா பேக் அண்டு டெல்டா பிளாஸ்ட் நிறுவனம் பாலித்தீன் சாக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.
ஆனால், அத்துடன் அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. கணேசனும், பாலமுருகனும் வீட்டிற்கு கடந்த 7 மாதங்களாக பணம் அனுப்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் குடும்பத்தாரால் முடியவில்லை.
இந் நிலையில், சில தினங்களுக்கு முன் எகிப்தில் இருந்து தொடர்பு கொண்ட கணேசனும், பாலமுருகனும் தாங்கள் ஓய்வே இல்லாமல் 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்படுவதாகவும், அடித்து கொடுமைப்படுத்தப்படுவதாகவும், கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பட்டினியோடு சித்ரவதைக்கு உள்ளாகி வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதே போன்று திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்த நவநீதம் என்பவர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 52 தொழிலாளர்கள் இங்கு சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தங்களை மீட்குமாறு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.
இவர்களது பிரச்சனை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் புகார் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications