அரசு கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு – பள்ளி நிர்வாகிகள் உண்ணாவிரதம்
நெல்லை: அரசு நிர்ணயித்துள்ள கட்டண விகிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பள்ளிக்கூட நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் ஏற்புடையதாக அல்ல, எனவே கல்விக் கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நெல்லை மாவட்ட மெட்ரிக்குலேஷன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் உண்ணாவிரம் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் உள்பட 800 பேர் கலந்து கொண்டுள்ள இந்த போராட்டத்துக்கு ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஜெயேந்திரர் தலைமை வகிக்கிறார்.
கோவை பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படாது
இதற்கிடேயே, தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டண உயர்வை அமல் படுத்த முடியாது என்பதால் பள்ளிக் கூடம் திறப்பதை தள்ளி வைப்பதாக கோவை நர்சரி மற்றும் பநிரமைரி பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்று இவர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிகளை மூடுவோம்
இதற்கிடையே, தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண நிர்ணயம், எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை மீண்டும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உருவாகும் என்று திருப்பூர் மாவட்ட சுயநிதி பள்ளிகளின் நிர்வாகிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண நிர்ணயம், எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக கட்டணம் அறிவித்துள்ளது தவறானது. அதுவும் வகுப்பு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பள்ளிகளுக்கு முதல் வகுப்பிற்கு அறிவிக்கப்பட்ட தொகையை விட, ஆறாம் வகுப்பிற்கு குறைவாக கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அவசரமாக அறிவித்தது போல் உள்ளது. இதை மீண்டும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உருவாகும் என்றார்.












Click it and Unblock the Notifications