பிரபாகரனுக்காக சாகவும் தயார்- இயக்குநர் சீமான்
சங்கரன்கோவில் : பிரபாகரனுக்காக எந்த நிமிஷத்திலும் சாகத் தயார் என்று சங்கரன்கோவிலில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசினார்.
நெல்லை வடக்கு மாவட்ட நாம் தமிழர் இயக்க கலந்தாய்வு கூட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசியதாவது,
நாம் தமிழர் இயக்கத்தின் மாநாடு 18ல் மதுரையில் நடைபெறுகிறது. நான் பேச்சாளனோ, கருத்தாளனோ, எழுத்தாளனோ இல்லை. நான் ஒரு உணர்வாளன். அவ்வளவுதான். நான் பணக்காரன் இல்லை. ஒரு தமிழன் அது போதும் எனக்கு.
பிரபாகரனுக்காக எந்த நிமிஷத்திலும் மரணத்தை சந்திக்கவும் தயாராகதான் இங்கு வந்து இருக்கிறேன். தமிழனாக பிறந்த எவனும் யாரிடமும் கைகட்டி நிற்காது, காலில் விழாது இருக்க வேண்டும். குற்றங்களை சுட்டி காட்டதான் நமக்கு கைகள் இருக்கிறது. மனிதன் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும்.
நான் சிறையில் இருந்தபோதே என்னை தேர்தலில் போட்டியிட வைக்க அணுகாத கட்சிகளே இல்லை. பிரபாகரனின் தம்பியாக இருந்து போராடுவதே எங்களின் லட்சியம்.
நாட்டில் எந்த கட்சியும் சரியில்லை. உலகத்தில் எந்த இனத்திற்கும் ஏற்படாத கொடுமை என் தமிழனத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழன் என்று தன்னை இந்தியன் என்று கருதினானோ அன்றே தமிழினம் செத்து விட்டது. நாம் இந்தியர்கள் இல்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை திராவிட நாடு என்றால் தமிழகத்தில் இத்தனை திராவிட அமைப்புகள் இருந்தும் மற்ற மாநிலங்களில் ஒரு திராவிட அமைப்பு கூட இல்லையே ஏன்...
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் நாங்கள்தான் ஆளுவோம். பிரபாகரன் இருந்த இடத்தில் நான் இருந்திருந்தால் உலக பயங்கரவாதியாக மாறியிருப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications