அப்சல் குருவின் கருணை மனு குறித்து மத்திய அரசு கடிதம் - ஷீலா தீட்சித் மறுப்பு
டெல்லி: அப்சல் குருவின் கருணை மனுவை வைத்துக் கொண்டு என்ன செய்து வருகிறீர்கள் என்றுகேட்டு டெல்லி அரசுக்கு மத்திய உள்துறை கடிதம் எழுதியுள்ளதாம். ஆனால் அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, கருணை மனுவை விண்ணப்பித்து வி்ட்டு காத்திருக்கிறார். குருவைத் தூக்கில் போடாமல் இருப்பது குறித்து காங்கிரஸ் அரசு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் அப்சல் குருவின் கருணை மனுவை வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு டெல்லி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாம்.
ஆனால் இக்கடிதம் வரவில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்படி ஒரு கடிதம் எனக்கு வரவில்லை. ஒருவேளை டெல்லி உள்துறை அமைச்சகத்திற்கு வந்திருக்கலாம் என்றார். டெல்லி அரசின் உள்துறையும் ஷீலாவசம்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்சல் குரு தற்போது டெல்லி திகார் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமும் அப்சல் குருவின் கருணை மனு தொடர்பாக டெல்லி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியிருந்தது. அதற்கு ஷீலா தீட்சித் பதிலளிக்கையில்,லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் இதுகுறித்துப் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை அவர் முடிவெடுக்காமல் இருப்பது காங்கிரஸுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் புதிய கடிதத்தை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
அப்சல் குருவின் கருணை மனு 27வது வரிசையில் இருப்பதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியிருந்தார். மேலும்,இதில் அவசரம் காட்ட முடியாது. வரிசைப்படிதான் பரிசீலிக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப்புக்கு முன்னதாக அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.