ஈழத் தமிழர்களைக் காக்கத் தவறிய இந்தியா - பினாங்கு துணை முதல்வர் புகார்
மதுரை: இலங்கையில், ஈழத் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் காக்க இந்திய அரசு முயற்சிக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டது என்று மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் நடக்கும் 'நாம் தமிழர்' இயக்க மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசிய கடலில் 75 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு, முகாம்களில் உள்ளனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பினால், பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது என போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரிஷீயஸ் உட்பட பல நாடுகளில் தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை மோசமாக உள்ளது. இந்திய அரசு எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை. இந்திய அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்திய மக்கள் மீது நம்பிக்கை உண்டு.
மலேசிய தமிழர்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் மாநாடு டெல்லியில் நடந்தபோதும், தற்போது உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கும் வந்த அழைப்பை நிராகரித்துவிட்டேன். காரணம், இலங்கை தமிழர்களை இந்திய மற்றும் தமிழக அரசுகள் காப்பாற்றாமல் கண்களை மூடிக் கொண்டிருந்தே என்றார் ராமசாமி.












Click it and Unblock the Notifications