தேர்தல் ஆணைய பணிகளில் தலையிடவில்லை- குப்தாவுக்கு தமிழக அரசு பதில்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிடவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமேலவை அமைப்பு பணிகளுக்காக, தேர்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்புப் பணி அதிகாரியாக ஜமாலுதீன் நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை சட்டமன்ற செயலாளர் செல்வராஜ் கடந்த 15ம் தேதி பிறப்பித்தார். இந்த நியமனம் தொடர்பாக தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும், இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் தமிழக அரசு தலையிடுவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற செயலாளர் செல்வராஜ் கூறுகையில்,
மேலவைத் தேர்தலுக்காக, பொது (தேர்தல்) துறையுடன், ஒருங்கிணைப்பு பணிகளில் மட்டுமே சிறப்பு பணி அலுவலர் ஈடுபடுவார். அவர் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் குறுக்கிட மாட்டார். தேர்தல் நடத்துவது மற்றும் தொகுதி சீரமைப்பு போன்றவை தேர்தல் ஆணையம்தான் மேற்கொள்ளும்.
இதற்காக, தமிழகத்தின் பல்வேறு துறைகளை பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையம் கேட்கும். தேர்தல் ஆணையத்தினர் கேட்கும் தகவல்கள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட துறைகளிடம் கேட்டு பெற்று தரவேண்டியது அவசியம். இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் சிறப்பு பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் குறுக்கிடும் நோக்கத்தில் அமைந்ததல்ல.
மேலவைப் பணிகளுக்காக சிறப்புப் பணி அலுவலருக்கு உதவ துணைச் செயலாளர், சட்டப்பேரவை நிருபர்கள் சிலர், ஓட்டுனர், உதவியாளர் போன்றோர் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து விரைவில் நியமிக்கப்படுவர். சட்டமன்ற வளாகத்தில், சிறப்பு பணி அலுவலருக்கு தனி அறை தயாராகி வருகிறது. மேலவை அமைக்கப்பட்டதும், அதற்கு தனியாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications