லைலா புயலுக்குப் பெயர் வைத்த பாகிஸ்தான் - அடுத்த புயல் 'பாண்டு'
வியாழக்கிழமை பிற்பகலில் ஆந்திரக் கரையைக் கடக்கிறது லைலா. அழகான இந்தப் பெயரைக் கொண்ட புயல், சென்னையை புரட்டிப் போட்டுப் போய் விட்டது. கடலோர ஆந்திராவை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவைத் தாக்கும் புயல்களுக்குப் பெயரிடும் பழக்கம் 2004ம் ஆண்டுதான் தொடங்கியது. அதிலும் பெண்கள் பெயராகத்தான் புயலுக்கு வைக்கிறார்கள்.
இதற்கு ஒரு பின்னணி உள்ளது. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து பொதுவான பெயர்களை சூட்டி வருகின்றன.
ஆசியா, பசிபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார, சமூக ஆணையம் மற்றும் உலக வானியல் கழகம் சூட்டியுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு இந்தப் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
இந்த எட்டு நாடுகளும் சேர்ந்து தற்போது 64 பெயர்களைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளன. இதிலிருந்து இதுவரை 22 புயல்களுக்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டதாம். கடைசியாக சூட்டப்பட்ட பெயர்தான் லைலா. இதை சூட்டியது பாகிஸ்தான்.
கடைசியாக சூட்டப்பட்ட பெயர்களும், அதைச் சூட்டிய நாடுகளும் - நர்கீஸ் (பாகிஸ்தான், ராஷ்மி (இலங்கை), கை முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவுகள்), பியான் (மியான்மர்),வார்ட் (ஓமன்).
இந்த வரிசையில் அடுத்து வரவுள்ள புயலுக்கு பாண்டு என்ற பெயர் சூட்டப்படுமாம். இப்பெயரை இலங்கை சூட்டியுள்ளதாம்.
இப்படிப் புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கத்தை ஆஸ்திரேலிய வானியல் நிபுணர் கிளமென்ட் ரேக்தான் ஆரம்பித்து வைத்தார். அதற்கு முன்பு வரை புயல்களுக்கு 1ஏ, 1பி என்றுதான் பெயர் சூட்டப்பட்டு வந்தன.