கப்பல் மூழ்கடிப்பு விவகாரம்: தென் கொரியா மீது போர்- வட கொரியா மிரட்டல்

கடந்த மார்ச மாதம் தென் கொரிய போர்க் கப்பல் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டு 46 வீரர்கள் பலியாயினர். இந்த விவகாரத்தில் வட கொரியா மீது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால், இரு நாடுகளிடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் பதற்றம் மேலும் அதிகரித்துவிடும் என்பதால் தென் கொரியா இந்த விஷயத்தில் இதுவரை அமைதி காத்து வந்தது.
மூழ்கிய கப்பலை மீட்டு ஆய்வு நடத்திய தென் கொரிய ராணுவத்தினர், கப்பலைத் தாக்கிய வட கொரிய ஏவுகணை பாகத்தை கண்டெடுத்துள்ளனர்.
இதையடுத்து வட கொரியா மீது நேரடியாகவே தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஐ.நாவி்ல் புகார் தந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தவும் தென் கொரியா முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவிலும் பொருளாதார தடைகளை விதிக்க வைக்கும் முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.
இதையடுத்து தென் கொரியாவுக்கு வட கொரியா, கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வட கொரிய பாதுகாப்பு கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கொரிய கப்பல் மூழ்கியதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. வேண்டுமென்றே இந்தக் குற்றச்சாட்டை கூறுகின்றனர். இதைக் காரணம் காட்டி பொருளாதார தடை போன்றவற்றை கொண்டு வர முற்பட்டாலோ, எங்களை தாக்க முயற்சித்தாலோ பயங்கர போர் உள்பட பல்வேறு கடும் நடவடிக்கைகளில் இறங்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் மேலும் அதிகமாகியுள்ளது.
தென் கொரிய கப்பல்கள் எச்சரிக்கை:
இந் நிலையில் தென் கொரியா-வட கொரியாவுக்கு இடையிலான கடலில் சர்ச்சைக்கிடமான பகுதிக்குள் நுழைந்த வட கொரிய போர் கப்பல்களை எச்சரிக்கும் விதத்தில் தென் கொரிய போர் கப்பல்கள் பீரங்கி குண்டுகளை சுட்டன.
கம்யூனிஸ்ட் நாடான வட கொரியாவுக்கும் அமெரிக்க ஆதரவு நாடான தென் கொரியாவுக்கும் இடையே 1953ம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications