வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ... பினாங்கு துணை முதல்வர் பேச்சு
மதுரை: தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட்டால் தான் வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும் என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறினார்.
மதுரையில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டில் அவர் பேசுகையில்,
அதிகாரத்தை பயன்படுத்தியே தமிழர்களின் தலையெழுத்தை மாற்ற முடியும். மலேசியாவில் வரும் தேர்தலில் மத்திய ஆட்சியை நாங்கள் சார்ந்த கட்சி கைப்பற்றினால், தமிழ் இனத்துக்கு அங்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும்.
அரசியல் மூலம் உலகத் தமிழர் நிலையை மேம்படச் செய்ய முதலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என என்னை நிர்பந்தித்தனர்.
தமிழக மக்களுக்கு சரியான தலைமை தேவை. அப்போதுதான் உரிய மாற்றம் கொண்டுவர முடியும். உலக அளவில் எங்கேனும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை முன்பு இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை தற்போது போய்விட்டது.
மலேசியா, மொரீஷியஸ் என்றாலும் தமிழர்களுக்கு அரசியல் மறுமலர்ச்சி தேவை. அங்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் முதலில் தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். அப்போதுதான் வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும்.
இலங்கை போர் குறித்து அந்நாட்டு அதிபரை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் 75 பேர் மலேசியாவில் தவித்து வருகின்றனர். அவர்களை சந்திக்க எனக்குக்கூட முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நான் சந்தித்தேன்.
தற்போது அவர்களை இந்தோனேசியாவில் தங்கவைக்க பேச்சு நடத்தி வருகிறேன். அங்கு தங்க வைக்க அந்நாட்டு அரசு சம்மதித்துள்ளது. எனினும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் இடமளிக்க முதல்வர் கருணாநிதி முன் வரவேண்டும் என்றார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் படம்:
இந்தப் பொதுக் கூட்ட மேடையின் பின்புறம் உலக அளவிலான மற்றும் தமிழக தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சந்தனக் கடத்தல் வீரப்பன் படமும் இடம் பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications