முதல்வரின் வீட்டை படம் பிடித்த ஆந்திர பயணிகளால் பரபரப்பு
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை சிஐடி காலனியில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டை படம் பிடித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சிஐடி காலனியில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டருகே காரில் வந்த சிலர் அதை படம் பிடித்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார், காரில் இருந்தவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த தகவல்களில் மேலும் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், அவர்கள் ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவலட்சுமி (20), சாந்தகுமார் (25), லட்சுமணன் (25), ராம்பாபு (20) என்று தெரிய வந்தது.
சென்னையை சுற்றிப் பார்க்க வந்ததாகவும், அது முதல்வரின் வீடு என்பதை அறிந்து படம் எடுக்க முயன்றதாகவும் கூறினர்.
இதையடுத்து, போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.