முதல்வர் பதவி-விலக சிபுசோரன் திடீர் மறுப்பு: பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி
ராஞ்சி: முதல்வர் பதவியிலிருந்து விலக சிபு சோரன் திடீரென மறுத்து வருவதால் ஜார்கண்ட் மாநிலத்தில் கூட்டணி அரசு அமைக்கும் பாஜகவின் முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த வெட்டுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்ட சிபு சோரன் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதையடுத்து அவரது கூட்டணிக் கட்சியான பாஜக ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது.
இந் நிலையில் மீண்டும் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க பாஜகவுக்கும் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி இரு கட்சிகளுக்கும் தலா 28 மாதங்கள் முதல்வர் பதவி ஒதுக்கப்படும். முதலில் பாஜக சார்பில் அர்ஜூன் முண்டா முதல்வராவார். 28 மாதங்களுக்குப் பின் சிபு சோரனுக்கு பதவியை பாஜக விட்டுக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் அவரது கட்சியைச் சேர்ந்தவர் 28 மாதங்கள் முதல்வராக இருப்பார், இதற்காக வரும் 25ம் தேதி சிபு சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், இந் நிலையில் சிபு சோரன் திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நான் 25ம் தேதி முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன். 25ம் தேதி நான் பதவி விலகுவேன் என்று பாஜக வெளியிட்ட அறிவிப்பு என்னை கட்டுப்படுத்தாது. இந்தப் பிரச்சனையில் நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை. நான் எப்போது பதவி விலகுவேன் என்றும் கூற முடியாது.
நான் எந்தவித நெருக்கடிக்கும் பணிய மாட்டேன். எனது கட்சி எம்எல்ஏக்கள் என் பக்கம் ஆதரவாக உள்ளனர். விரைவில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.
இதனால் பாஜக பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இது குறுத்து பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஜார்கண்ட் பிரச்சனை பற்றி பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள். எனவே தற்போது எதுவும் கூறுவதற்கு இல்லை என்றார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணா கிஷோர் கூறுகையில், இரு தரப்பினரும், தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை கவர்னர் பரூக் முன் ஆஜர்படுத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு சரியான முடிவு கிடைக்கும் என்றார்.
82 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் பாஜக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு தலா 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது நீடித்து வரும் சிபுசோரனின் அரசுக்கு பாஜகவின் 18 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தளத்தின் 2 உறுப்பினர்களும், ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சியின் 5 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 2 பேரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications