ராஜீவ் காந்தி 19வது ஆண்டு நினைவு தினம்- நினைவிடத்தில் அஞ்சலி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி இரவு தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
இன்று ராஜீவ் காந்தியின் 19வது நினைவு தி்னமாகும். இதையொட்டி இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜீவ் காந்தி படத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் மலர் அஞ்சலிசெலுத்தப்பட்டது. ரத்ததான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு, தங்கபாலு மாலை அணிவித்தார்.9.30 மணிக்கு ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
டெல்லியில் உள்ள ராஜீ்வ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் தலைமையில் உறுதிமொழி:
ராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று கொடுஞ் செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு முதல்வர்
கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் முதல்வர் தலைமையில் அரசு ஊழியர்கள் கொடுஞ்செயல் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அந்த உறுதிமொழி வருமாறு:
''அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகயும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்''.