விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது - தகவல்கள்
மங்களூர்: மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர்இந்தியா விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.
ரன்வேயில் விமானம் இறங்கியபோது வழக்கம் போலவே இறங்கியுள்ளது. அந்த சமயத்தில் மழை பெய்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரன்வே ஈரமில்லாமல்தான் இருந்ததாக கூறப்படுகிறது.
விமானம் இறங்கிய வேகத்தில் திடீரென வேகமாக ஓடி ரன்வேயைத் தாண்டிப் போய் விட்டது. அந்த சமயத்தில், விமானத்தின் பின் பகுதி ரன்வேயில் இடித்து காட்டுப் பகுதியில் நுழைந்துள்ளது.
இதனால் விமானம் தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது. போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்து க்குக் காரணம் என ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமானியின் தவறே இதற்குக் காரணம் என்று ஒரு தகவல் கூறுகிறது. விமானத்தை செலுத்திய பைலட் செர்பியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றவராவார். அவரது பெயர் குளுசியா. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்த அலுவாலியா ஆவார்.












Click it and Unblock the Notifications