நித்தியானந்தா ஆசிரமத்தில் நான் அடைத்து வைக்கப்படவில்லை - நெல்லை பெண் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நித்தியானந்தாவின் பிடாதி ஆசிரமத்தில் நான் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக எனது கணவர் பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்று நெல்லையைச் சேர்ந்த பெண் ஆரோக்கியவிமலா கூறியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சகாய ஜார்ஜ் (45). பழ வியாபாரியான இவர் நேற்று நெல்லை போலீஸ் கமிஷனர் அபயகுமார் சிங்கை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,

எனக்கும், என் அக்காள் மகள் ஆரோக்கிய விமலாவுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு என் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உடையார்பாளையத்தைச் சேர்ந்த ஓஷோ மணியிடம் சிகிச்சைக்குச் சென்றோம்.

ஓஷோ மணி, தன்னை நித்யானந்தாவின் முக்கிய சீடர் என்று கூறினார். அவர் வசீகர வார்த்தைகளால் என் மனைவியை நித்யானந்தாவின் பக்தை ஆக்கினார். கடந்த 2006-ம் ஆண்டு, ஓஷோ மணி மூலம் என் மனைவி, 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்து விட்டார். அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. அவர்களை மீட்டுத் தருவதுடன், ஓஷோ மணி, நித்யானந்தா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆரோக்கிய விமலா, நேற்று மாலை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், நித்யானந்தா சாமியார் தன்னை கடத்தி சிறை வைக்கவில்லை என்றும், தனது கணவர் பொய் புகார் கொடுத்துள்ளார் என்றும், பொய் புகார் கொடுத்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விமலா கொடுத்துள்ள மனுவில்,

எனது கணவர் ஜார்ஜ் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், விளம்பர நோக்கத்தோடு தவறான ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். நான் எனது கணவரை பிரிந்து கடந்த 5 வருடங்களாக, சென்னை மேற்கு மாம்பலத்தில் எனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறேன். எனது 2 குழந்தைகளும் என்னுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

எனது கணவருக்கும், எனக்கும் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. எனது கணவரின் கொடுமை தாங்காமல்தான் அவரை பிரிந்து வாழ்கிறேன். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள நான் தற்போது கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் குழந்தைகளை வளர்த்து வருகிறேன்.

என்னை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு எனது கணவர் இந்த புகாரை கொடுத்துள்ளார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,நித்தியானந்தா சாமியாரின் சொற்பொழிவை ஒரே ஒரு முறை கேட்டுள்ளேன். மற்றபடி அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது ஆசிரமத்திற்கும் நான் போனது இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+