விபத்துக்குள்ளான ஏர் இந்தியா வி்மான பைலட் 10,000 மணி நேரம் பறந்த அனுபவசாலி

55 வயதான குளுசிகா, செர்பியாவைச் சேர்ந்தவர். ஆனால், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். 10,000 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். அவருடன் இணை பைலட்டாக பயணித்தவர் எச்.எல்.அலுவாலியா.
மங்களூர் குறித்து நன்கு அறிந்தவர் குளுசிகா. மங்களூர் விமான நிலையத்தில் மொத்தம் 19 முறை விமானத்தை தரையிறக்கிய அனுபவம் பெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குளுசிகா இந்தியாவில் விமானம் ஓட்டி வந்தார்.
அலுவாலியா கர்நாடகத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விமான ஓட்டியாக செயல்பட்டு வந்தார். இதுவரை 3750 மணி நேரம் பறந்த அனுபவம் கொண்டவர். மங்களூர் விமான நிலையத்தில் இவர் இதுவரை 66 முறை விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
குளுசிகாவும் சரி, அலுவாலியாவும் சரி விமானத்தை தரையிறக்குவதில் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கவில்லை. மேலும் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டதாகவும் அவர்கள் வான் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தரவில்லை.
மங்களூர் விமான நிலைய ரன் வே ஒரு டேபிள் டாப் ரன்வே ஆகும், அதாவது கையடக்கமான ரன்வே. இதுபோன்ற ரன்வேக்களில் விமானத்தை டேக் ஆப் செய்வதும், இறக்குவதும் சற்று சவாலானது. குறிப்பாக மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தைத் தரக் கூடியது.
பாஜ்பா பகுதியின் மலை உச்சியில் இந்த ரன்வே அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் வனம் சூழ்ந்த பகுதியில் இது அமைந்துள்ளது. நாட்டின் மிகவும் அபாயகரமான ஏர்போர்ட் என்று வர்ணிக்கப்பட்டாலும் கூட எப்போதும் இந்த ஏர்போர்ட் நிரம்பி வழியும்.
கர்நாடக மாநிலத்தின் மங்களூர், உடுப்பி, கனரா உள்ளிட்ட பகுதி மக்களுக்கும், கேரளாவின் காசர்கோடு, கண்ணூர் பகுதி மக்களுக்கும் இந்த விமான நிலையம் பெரும் வரப் பிரசாதமாக இருந்ததே இந்த அளவுக்கு பயணிகள் அதிகம் வரக் காரணம்.
கடந்த 2006ம் ஆண்டு பாஜ்பே விமான நிலைய ரன்வே 8000 அடியாக நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இதுவரை 32,000 விமான தரையிறங்கல்கள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றைய சம்பவத்திலும் கூட விமானம் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல்தான் தரையிறங்கியுள்ளது. ஆனால் அடுத்த சில விநாடிகளில்தான் ஏதோ நடந்து விமானம் வேகமாக ஓடி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணமாக பல அம்சங்கள் கூறப்பட்டாலும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே அதுகுறித்த தெளிவு ஏற்படும்.












Click it and Unblock the Notifications