கசாப்பிடம் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது - 60 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம்
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கசாப்பிடம் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது. அவன் 60 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.
சிறை அதிகாரிகள் தீர்ப்பின் நகலை கசாப்பிடம் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கசாப், நகலை தனது அறையிலேயே வைத்துள்ளான்.
தீர்ப்பின் நகலைப் பெற்ற 60 நாட்களுக்குள் அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்பது சிறை விதியாகும். தற்போதைய சூழ்நிலைப்படி கசாப்புக்கு வக்கீல் கூட தேவைப்படாது. அப்பீல் செய்ய விரும்புவதாக சிறை அதிகாரிகளுக்கு கசாப் எழுத்துமூலமாக தெரிவித்தால் போதும்.
அந்த கடிதத்தை பாம்பே உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகளே முறைப்படி சமர்ப்பிப்பார்கள். பின்னர் இந்த அப்பீல் மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்கும். அதன் பின்னர் தனது விருப்பத்திற்கேற்றார் போல வக்கீலை கசாப் தேர்வு செய்யலாம். அவனால் வக்கீலை தேர்வு செய்ய முடியாமல் போனால், நீதிமன்றமே வக்கீலை தேர்வு செய்து தரும்.
பின்னர் தீர்ப்பின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கும்.
அதேபோல, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.












Click it and Unblock the Notifications