பெட்ரோல் - டீஸல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது! - அமைச்சர் முரளி தியோரா
சென்னை: பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.
இன்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் முரளி தியோரா. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
"கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு உதவியுடன் இத்திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை போல கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை பிற மாநில அரசுகளும் செய்ய திட்டமிட்டுள்ளன.
தற்போது மராட்டிய மாநிலமும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதற்காக தமிழகத்தில் இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நானும், மராட்டிய மாநில முதல்-மந்திரி அசோக்சவான் ஆகியோர் வந்துள்ளோம்.
இத்திட்டம் செயல்படும் இடங்களுக்குச் சென்று பார்வையிட உள்ளோம். பெட்ரோலிய கச்சா பொருட்களின், விலை சர்வதேச சந்தையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலை சமீபத்தில் சிறிதளவுதான் உயர்த்தப்பட்டது. விலை உயர்வினால் எண்ணை நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளன. இதை எப்படிச் சமாளிப்பது என்று திகைத்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஆகவே இது தொடர்பாக ஆய்வு செய்து ஆலோசனை வழங்க 45 எம்.பி.க்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்த குழுவினர் ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை தருவார்கள்.
அதன் பிறகே பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றவர்கள் விவரம் மற்றும் ஆய்வு பற்றிய விவரங்கள் நாளை அறிவிக்கப்படும்..." என்றார்.












Click it and Unblock the Notifications