சோரனுக்கு பாஜக ஆதரவு வாபஸ்-மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவு
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மீண்டும் வாபஸ் பெற்றது பாஜக. இதையடு்த்து மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்வர் சிபு சோரனுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த வெட்டுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்ட சிபு சோரன் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதையடுத்து அவரது கூட்டணிக் கட்சியான பாஜக ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது.
இந் நிலையில் மீண்டும் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க பாஜகவுக்கும் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இதன்படி இரு கட்சிகளுக்கும் தலா 28 மாதங்கள் முதல்வர் பதவி ஒதுக்கப்படும். முதலில் பாஜக சார்பில் அர்ஜூன் முண்டா முதல்வராவார். 28 மாதங்களுக்குப் பின் சிபு சோரனுக்கு பதவியை பாஜக விட்டுக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் அவரது கட்சியைச் சேர்ந்தவர் 28 மாதங்கள் முதல்வராக இருப்பார், இதற்காக வரும் 25ம் தேதி சிபு சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், முதல்வர் பதவியிலிருந்து விலர முடியாது என்று சோரன் திடீரென அறிவித்தார். இதையடுத்து அவரை கெஞ்சியும், மிரட்டியும் பணிய வைக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது. ஆனால், அவர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் தொடர முயற்சித்து வருவதால் பாஜகவின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.
இதையடுத்து சிபு சோரனுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என்று பாஜக மீண்டும் முடிவு செய்தது.
இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கை சந்தித்து, பாஜக துணை முதல்வர் ரகுவர் தாஸ் கடிதம் கொடுத்தார். இதன்மூலம் சிபுசோரன் அரசுக்கு ஒரே மாதத்தில் 2 முறை ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது பாஜக.
இதையடுத்து ஒரு வாரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு சோரனுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.
82 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் பாஜக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு தலா 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
சிபுசோரனின் அரசுக்கு பாஜகவின் 18 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தளத்தின் 2 உறுப்பினர்களும், ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சியின் 5 எம்எல்ஏக்களும், சுயேச்சைகள் 2 பேரும் ஆதரவு கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications