திருப்பதி கோயிலில் ஜெயலலிதா தரிசனம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தார்.
திருப்பதிக்கு வந்த அவரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் ஆதிகேசவலு மற்றும் கோயில் அதிகாரிகள் வரவேற்றனர்.
ஆந்திர மாநில அதிமுக செயலாளர் எஸ்.ஏ. பக்கர், திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளர் மூர்த்தி, வட சென்னை மாவட்ட அவைத் தலைவர் நீலகண்டன் உள்ளிட்ட அதிமுகவினரும் திருப்பதிக்கு வந்து அவரை வரவேற்றனர்.
பின்னர், ஜெயலலிதா சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்.
காலாவதி மருந்துகள்-சிபிஐ விசாரிக்க வேண்டும்:
இந் நிலையில் காலாவதி மற்றும் போலி மருந்துகள் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் அரிசி கடத்தல், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல், மணல் கொள்ளை, கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை, காலாவதி மருந்துகள் விற்பனை, போலி மருந்துகள் விற்பனை, காலாவதி உணவுப் பொருட்கள் விற்பனை ஆகிய தொழில்கள் தான் தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஒருபுறம் காலாவதி மற்றும் போலி மருந்து விற்பனை குறித்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து காவல் துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம், “காலாவதி மருந்துகளை விற்பதால் உயிருக்கு பெரிய ஆபத்து இருக்க வாய்ப்பில்லை. காலாவதி மருந்து விற்பனை கொஞ்சம் பரவாயில்லை என்றே எண்ண வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் கருணாநிதி பேசியுள்ளார்.
கருணாநிதியின் இந்தப் பேச்சு காலாவதி மருந்து விற்பனையை ஆதரிப்பதாகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கமாகவும் அமைந்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சிசுந்தரத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை தளர்த்தக் கோரி தாக்கல் செய்ப்பட்ட மனுவின் மீது, மனுதாரர் சார்பாக திமுகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் அஜராகிறார்.
சென்னையிலும், புதுச்சேரியிலும் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் போலி மற்றும் காலாவதி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், தனியார் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் மருந்து விநியோக மையங்களில் அனுமதிக்கப்படாத மருந்துகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், இதற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்றும் மத்திய புலனாய்வுத் துறையின் இணை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் சிபிசிஐடி விசாரணை என்பது பொருத்தமாக இருக்காது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த ஏதுவாக காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனை குறித்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உட்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும்.
காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனை குறித்த வழக்கில் இரட்டை வேடம் போடும் முதல்வர் கருணாநிதியைக் கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில், நாளை (25ம் தேதி) சென்னை மெமோரியல் ஹால் அருகில், பூங்காநகர் தபால் நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications