அமெரிக்கன் சென்டர் தாக்குதல்-அன்சாரியின் தூக்கு தண்டனை நிறுத்தம்

கொல்கத்தாவில் அமெரிக்கன் சென்டர் மீது 2002ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆப்தாப் அகமத் அன்சாரி, ஜமாலுதீன் நசிர் உள்ளிட்ட 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த அன்சாரி துபாய்க்கு தப்பினார். அவரை துபாய் போலீசார் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அன்சாரி, ஜமாலுதீன் நசிர் உள்ளிட்ட 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. ஷகீல் மாலிக், திலிப் குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரி்த்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அன்சாரி, ஜமாலுதீன் நசிர் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்ற 5 பேரின் தண்டனையும் குறைக்கப்பட்டது.
இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து அன்சாரி, ஜமாலுதீன் நசிர் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் கடந்த 11ம் தேதி ஜமாலுதீன் நசிர் மீதான தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது.
அன்சாரி மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, பிரசாத் தலைமையிலான பெஞ்சு இன்று அன்சாரியின் தூக்கு தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அன்சாரியின் அப்பீல் மனு தொடர்பாக 4 மாதங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்












Click it and Unblock the Notifications