நதி நீர் பிரச்சனை: மத்திய அரசு வேடிக்கை பார்க்கவில்லை-கருணாநிதிக்கு பிரதமர் பதில்

கடந்த 2ம் தேதி டெல்லியில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, காவிரி நதிநீர்ப் பகிர்வு, ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாலாறில் ஆந்திரம் தடுப்பு அணைகளைக் கட்டுவது, முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த உயரத்துக்குக்கூட நீரை நிரப்பிக்கொள்ள தமிழ்நாட்டுக்கு கேரளம் எதிர்ப்பு தெரிவிப்பது ஆகிய பிரச்சனைகல்,"மத்திய அரசு வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்க்கக்கூடாது'' என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஓராண்டு பூர்த்தி செய்ததையடுத்து நிருபர்களை சந்தித்த பிரதமரிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மன்மோகன் சிங்,
இனி வரும் காலங்களில் நீர் பகிர்வு ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கப் போகிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதே சமயம், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பகிர்வு பிரச்சனையில் மத்திய அரசு வெறும் பார்வையாளராக, கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக இயற்றப்பட்ட சட்டங்களும் வகுக்கப்பட்ட விதிமுறைகளும் மத்திய அரசுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன. பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்காவிட்டால் நடுவர் மன்றம் அமைக்க அரசியல் சட்டத்திலேயே இடம் உள்ளது.
எனவே நீரைப் பகிர்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் நடுவர் மன்றங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றின் கருத்துகள் பெறப்பட்டு அந்த அடிப்படையில் தீர்வு காணப்படுகிறது.
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சனைகளைத் தீர்க்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தும் மத்திய அரசால் முறையாக பின்பற்றப்படும் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications