எலுமிச்சை விலை கடும் வீழ்ச்சி-கவலையில் விவசாயிகள்
புளியங்குடி: புளியங்குடி எலுமி்ச்சை சந்தையில் 1,000 பழங்கள் ரூ. 3,000க்கு விற்பனையான நிலையில் தற்போது 1,000 பழங்கள் ரூ. 1,000 என்ற நிலைக்கு விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய எலுமிச்சை சந்தை புளியங்குடி. இதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 லட்சம் எலுமிச்சை மரங்கள் உள்ளன. இங்கு கோடிக்கணக்கான எலுமிச்சை பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்குள்ள சந்தையின் 28 கடைகளில் ஏலம் மூலம் ஆயிரம் பழங்கள் இன்ன விலை என நிர்ணயம் செய்யப்படுகின்றன. பொதுவாக கோடை காலங்களில் எலுமிச்சை பழங்களுக்கு கடும் கிராக்கி ஏற்படுவதுடன் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுவதால் ஆயிரம் பழங்கள் குறைந்தபட்சம் ரூ. 2,000 முதல் ரூ.3,000 வரை விற்பனையாகி வந்தன.
இந்நிலையில் அடிக்கடி கோடை மழை பெய்ததாலும், அதிகளவு எலுமிச்சை கொள்முதல் செய்யக்கூடிய அண்டை மாநிலமான கேரளாவில் மழை பெய்ததாலும் எலுமிச்சை விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 10 நாட்களாக 1,000 பழங்கள் ரூ.1,800, 1,400 என்று விற்பனையாகி வந்த நிலையில் நேற்று ரூ. 1,000 என்ற நிலைக்கு விலை வீழ்ச்சியடைந்தது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications