ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது

ஸ்ரீகாளஹஸ்தி ஞானப்ரகசாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 122 அடி உயரம் கொண்டது.
இந்தக் கோவில் 1516ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது.
இதன் ராஜகோபுரத்தில் கடந்த 1988ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் கோபுர சிற்பங்கள் உடைந்து விழுந்தன. சேதமடைந்த ராஜகோபுரம் ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
இந் நிலையில் இப்போது மீண்டும் ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு, அது விரிவடைந்து கொண்டே போய் கடந்த சில நாட்களில் இரண்டாக பிளந்து விட்டது.
சென்னை குழு விரைந்தது:
இது குறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட கலெக்டர் ராஜகோபுரத்தை பார்வையிட்டார்.
கோபுரத்தை சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்தை சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பேராசிரியர் நரசிம்ம ராவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்து ராஜகோபுரத்தை ஆய்வு செய்தனர். ராஜகோபுரத்தில் இருந்து விழுந்த சிற்பங்களின் பகுதிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.
இதுகுறித்து நரசிம்ம ராவ் கூறுகையில்,
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் அடித்தளம் பலமாக உள்ளது. ஆனால், கோபுர கற்கள் பலவீனமாக உள்ளன. காற்று, மழை போன்ற இயற்கை பருவநிலை காரணமாக ராஜகோபுரம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலை உள்ளது.
ராஜகோபுரத்தின் கட்டுமான கற்களின் ஒரு சிறிய பகுதியை எடுத்துச்செல்கிறோம். அந்த கற்களை சோதனை செய்தபிறகு இன்னும் ஒரு வாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications