அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

அதிமுக செயற்குழு கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று நடந்தது.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், ராஜ்யசபா தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை குறி்த்து ஆலோசிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரான முத்துசாமி கலந்து கொள்ளவில்லை.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
ஸ்பெக்டரம் ஊழலில் ஈடுபட்ட மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் முதல்வர் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.2,500 வழங்க வேண்டும். நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.15,00 வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
தமிழினமே கவலையில் ஆழ்ந்திருக்கும்போது, மாநாடு நடத்தும் கருணாநிதிக்கு இந்த செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
நதி நீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகளின் நலனை தாரைவார்த்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
தீவிரவாதம் தலைதூக்கி தமிழகம் ஆயுதக்காடாக மாறிவிட்டது. தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
காலாவதி மருந்துகளை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். விலைவாசியைக் கட்டுப்படுத்த உடனே உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்காத அரசை கண்டிக்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும்-ஜெ:
முன்னதாக நேற்று அதிமுகவைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசாவை பிரதமர் காப்பாற்ற முயற்சி செய்கிறாரா?
பதில்: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஊடகங்களில் பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சி.பி.ஐ. அதிகாரிகள் பல ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொலைதொடர்பு அமைச்சர் ராசா சாதாரணமானவர். இந்தப் பிரச்சனையில் அவரைவிட பலம் வாய்ந்த யாரோ உள்ளனர். அத்தகைய நபரைக் காப்பாற்ற பிரதமர் மன்மோகன் சிங் முயல்கிறார் என்றார் ஜெயலலிதா.
கேள்வி: 2011ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருமா?
பதில்: நிச்சயமாக வரும். போக போக தெரியும்.
கேள்வி:ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்: அதை ஆட்சி மன்றக் குழு முடிவு செய்யும் என்றார் ஜெயலலிதா.
திருப்பி அனுப்பப்பட்ட பாவப்பட்ட தொண்டர்!:
முன்னதாக ஜெயலலிதாவை பார்ப்பதற்காக, கை, கால் சூம்பிய நிலையில், மூளை வளர்ச்சி இல்லாத சிறுமியுடன் ஒரு தொண்டர் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் யார் நீங்கள்? நல உதவிப் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்று கேட்டனர்.
அதற்கு அவர், நான அம்மாவை (ஜெயலலிதா) பார்க்க வந்திருக்கிறேன். என் 15 வயது மகள் மூளை வளர்ச்சி இன்றி, போலியாவால் பாதிக்கப்பட்டு, கை, கால் சூம்பிய நிலையில் இருக்கிறாள். அவளது மருத்துவ சிகிச்சைக்காக அம்மாவை பார்க்க வந்திருக்கிறேன் என்றார்.
அவரையும் அந்தச் சிறுமியின் நிலையையும் நேரில் பார்த்த பிறகும் கூட அதிமுக தலைமை நிலைய நிர்வாகிகள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. வெளியே போகுமாறு விரட்டினர்.
இதையடுத்து , ஐயா என் மனுவையாவது அம்மாவிடம் சேர்த்து விடுங்கள் என்று கெஞ்சியபடியே அதிமுக நிர்வாகி ஒருவரிடம் மனுவைக் கொடுத்தார்.
தனது இரண்டு கைகளிலும் இரட்டை இலை சின்னத்தையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவங்களையும் பச்சை குத்தி இருந்த அவரிடம் விசாரித்தபோது,
என் பெயர் தங்கராசு. சேலம் ஆத்துரை சேர்ந்தவன், கூலித் தொழிலாளியாக உள்ளேன். நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன்.
என் மூத்த மகள் மஞ்சுளா (15) பிறந்தது முதலே வளர்ச்சி இன்றி, கை, கால் உறுப்புகள் வளர்ச்சி இன்றி துன்பப்பட்டு வருகிறாள்.மகளின் சிகிச்சைக்காக அம்மாவை பார்ப்பதற்காக வந்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. அவரை சந்திக்காமல் நான் போகவும் மாட்டேன். என்போன்ற உண்மை தொண்டர்களுக்கு அவர் உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications