ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 136 அடி உயரம் கொண்டது.
இந்தக் கோவில் 1516ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது.
7 அடுக்குகளைக் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் 1988ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. சில கோபுர சிற்பங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து சேதமடைந்த பகுதி ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன் கோவில் கோபுரத்தில் இருந்த பெரிய கல் பெயர்ந்து, சுற்றுலா பயணி ஒருவர் மீது விழுந்தது. இதில் அவர் பலியானார்.
அதன் பிறகு ராஜகோபுரத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. சில சிற்பங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் அந்த விரிசல் சரி செய்யப்படவில்லை. இதனால் விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்றது.
கடந்த சில நாட்களில் கோபுரமே இரண்டாகப் பிளந்து விட்டது.
இதையடுத்து கோபுரத்தை சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு பக்தர்கள் அதன் அருகே செல்வது தடுக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவு 8.05 மணிக்கு கோபுரம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகளும் தரைமட்டமாயின. மின்கம்பங்களும் ஒடிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.
ராஜகோபுரம் இடிந்து விழுந்ததை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு திரண்டு விடிய விடிய நின்றிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்ததும் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி விரைந்து வந்து ராஜகோபுர இடிபாடுகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியது.
மக்கள் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் புதிய ராஜகோபுரத்தை கட்டும் வரை இடிபாடுகளை அகற்ற விட மாட்டோம் என்று பொது மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மீண்டும் கட்ட ஆந்திர முதல்வர் உத்தரவு:
இந் நிலையில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அதே இடத்தில் புதிய ராஜ கோபுரம் கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அறநிலையத்துறை அமைச்சர் வெங்கட ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
காளகஸ்தி சிவன் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு முறையான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம் என்று புகார் கூறப்படுகிறது. கோபுரத்தில் ஆலமர செடிகள் முளைத்தபோது அதை கோவில் நிர்வாகம் அகற்றவில்லை என்றும், இதனாலும் கோபுர விரிசல் அதிகமானதாகவும் புகார் கூறப்படுகிறது.
பராமரிப்பில்லாத திருப்பதி கோவில் கோபுரங்கள்:
இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ராஜகோபுரங்களும் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பதி கோவில் மகா வாயில் கோபுரம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது 1472, 1950 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.
5 அடுக்குகளைக் கொண்ட இந்த மகா வாயில் கோபுரத்தில் ஆங்காங்கே ஆலமர செடிகள் முளைத்துள்ளன. அதே போல சிறிய வெள்ளி வாயில் கோபுரத்திலும் ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன.
இவற்றை அகற்றி கோபுரஙகளை முறையாகப் பராமரிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications