அதிமுக 'அதிகார மையம் தான்' காரணம்-சின்னசாமி

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக முத்துசாமியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார். அவருடன், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று ஈரோட்டில் தனது ஆதரவாளர்களுடன் முத்துசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எந்தக் கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் 3 நாட்களில் முடிவு செய்யப்படும். அதிமுகவுக்கு துரோகம் செய்யவில்லை. அதிமுக தலைமை கேட்டுக் கொண்டபடியே கடிதம் மூலம் அனைத்து விவரங்களையும் அனுப்பினேன். ஆனாலும் எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கிவிட்டனர் என்றார்.
'அதிகார மையம் தான்' காரணம்-சின்னசாமி:
அதே போல அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள இன்னொரு முன்னாள் அமைச்சரான சின்னசாமி கூறுகையில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக என்னை நீக்கியுள்ளனர். மேலும் முத்துசாமிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நான் ஒரு போதும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதே இல்லை. அடுத்த கட்ட செயல்பாடு குறித்து ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து ஓரிரு நாளில் முடிவு செய்வேன்.
மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எண்ணமில்லை. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட அதிமுகவில் உள்ள 'அதிகார மையம்தான்' காரணம் என்றார்.
2011ல் மீண்டும் திமுக ஆட்சி-அனிதா:
இந் நிலையில் திருச்செந்தூரில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சரும், இப்போதைய திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
தொடர்ந்து நடந்த 11 இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 2011ம் ஆண்டிலும் மீண்டும் திமுக அரசே அமையும்.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்வராக கருணாநிதி உள்ளார்.
திருச்செந்தூர் நகரில் ரூ. 14 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காயல்பட்டினம் நகரின் குடிநீர் பிரச்சனையைப் போக்க ரூ. 30 கோடியில் இரண்டாவது குடிநீர்க் குழாய் திட்டத்திற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications