பாமகவுடன் கூட்டணியா?: திமுக இன்று அறிவிப்பு- ஸ்டாலினை சந்தித்த பாமக எம்எல்ஏ

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட பாமக 22 எம்எல்ஏக்களைப் பெற்றது. ஆனால் அடுத்த சில காலத்திலேயே திமுகவுக்கும் பாமகவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பாமகவின் முக்கியப் பிரமுகர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். உடனே திமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த பாமக, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது.
ஆனால் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.
அதன்பிறகு அதிமுக கூட்டணியிலிருந்தும் விலகிய பாமக, தனித்தே செயல்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த பென்னாகரம் தொகுதியில் தனித்தே போட்டியிட்டு அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்று தனது பலத்தைக் காட்டியது. அதன்பிறகு பாமகவின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியை சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசி வருவதோடு, மீ்ண்டும் கருணாநிதியை முதல்வராக்குவோம் என்றும் முழங்க ஆரம்பித்துள்ளது.
மேலும் வரும் நாடாளுமன்ற ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு சீட் தருமாறு திமுகவுடன் மறைமுகமாகப் பேசியும் வருகிறது.
இதற்கிடையே, சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் சூழலில், மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளவும் பாமக தயாராக உள்ளது. இதுகுறித்து வெளிப்படையாகவே பாமக தலைவர்கள் பேசி வருகின்றனர். முதல்வர் கருணாநிதியும் அதற்கு சாதகமாகவே பேட்டிகளில் பதில்கள் கூறி வருகிறார்.
இந் நிலையில் நேற்று முதல்வரிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர், "நாளைக்குத் தான் (இன்று) எங்கள் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் என்ன முடிவு செய்வார்கள் என்று தெரியவில்லையே!" என்றார்.
இந் நிலையில் இன்று மாலை நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து சாதகமான முடிவையே மேற்கொள்ளவிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியை முடிந்தவரை பலவீனப்படுத்தி வைப்பதே திமுக நோக்கம் என்பதால் பழைய பகைகளை மறந்து மீ்ண்டும் பாமகவுடன் கைகோர்ப்பதே அழுத்தமான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதில் உறுதியாக உள்ளது திமுக.
இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடப் போகும் ராஜ்யசபா எம்பி வேட்பாளர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஸ்டாலினை சந்தித்த பா.ம.க. எம்எல்ஏ:
இந் நிலையில் மு.க.ஸ்டாலினை, துணை முதல்வராகி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி பாமக எம்எல்ஏ வேல்முருகன் அவரை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வேல்முருகன், துணை முதல்வர் எப்போதும், யாராலும் அணுக கூடியவராக இருக்கிறார். பொது மக்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்.
பாமக வைத்த பல கோரிக்கைகளை ஏற்று, அதற்கான தீர்வையும் பெற்று தந்திருக்கிறார். நாங்கள் எந்த நேரத்திலும் தொலைபேசியிலோ நேரடியாகவோ தொடர்பு கொள்ளக் கூடியவராகவும் இருக்கிறார்.
அவரால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல பல்வேறு தொழிலதிபர்களாலும் எளிதில் அணுகி தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை செய்ய முடிகிறது.
திருவொற்றியூரில் கண் பார்வையிழந்த மாணவிக்கு உதவி செய்தார். மேலும் பல மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறார். அவரை நேரில் பாராட்டவே வந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications