ஆவடி: குடிநீர் திட்டத்துக்கான 2,000 பிளாஸ்டிக் குழாய்கள் தீயில் எரிந்து நாசம்
சென்னை: ஆவடி நகராட்சி பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்தாக சுமார் 3,000 பிளாஸ்டிக் குழாய்கள் ஆவடி திருமுல்லைவாயல் இந்திரா காந்திநகர் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு குழாயும் 25 முதல் 30 அடி நீளம், 3 அடி அகலம் கொண்டவை. இவற்றின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று காலை இந்த பிளாஸ்டிக் குழாய்கள் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கின. 12 தீயணைப்பு வண்டிகளும், விமானப்படையினரின் தீயணைப்பு வண்டியும் தீயை அணைக்க பல மணி நேரம் போராடினர்.
ஆனால், தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து ஜே.சி.பி. வண்டிகள் மூலம் எரியாத குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இவ்வாறு சுமார் 1,000 குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆனால், சுமார் 2,000 பிளாஸ்டிக் குழாய்கள் முற்றிலும் எரிந்து விட்டன. தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக ஆவடி பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. வீடுகளுக்குள் புகை பரவியதால் வீடுகளைப் பூட்டிவிட்டு பலரும் வெளியேறினர்.
இந்தத் தீ விபத்தின் பின்னணியில் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.