ரயில் விபத்திலும் 'அரசியல் நடத்தும்' மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரயிலைக் கவிழ்த்தது 'மாணிக்கபுரா லோதாசுளி' என்ற நக்ஸலைட் அமைப்பு என்று தெரியவந்துள்ள நிலையிலும், பழியை இடதுசாரிகள் மீது போட்டு, இந்த விவகாரத்தில் முடிந்தவரை அரசியல் லாபம் பெறும் செயலில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு்ள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து வரும் நிலையில், அதில் வெற்றி பெறுவதற்காக ரயில் கவிழ்ப்புக்கும் ஆளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசியுள்ளார்.
ரயில் கவிழ்ப்பு மூலம் தனது பெயரைக் கெடுக்க முயற்சி நடந்துள்ளது என்றரீதியில் பேசியுள்ள அவர் இது குறித்து சிபிஐ விசாரணையைக் கோரியுள்ளார். இதையடுத்து மத்திய அரசும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முன்வந்துள்ளது.
அவர் கூறுகையில், இந்த ரயில் கவிழ்ப்பு சம்பவத்தை யார் நடத்தியிருந்தாலும், இந்த நாசவேலைக்கு அரசியல் சதியே காரணம் ஆகும். மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அரசியல்ரீதியில் எங்களுக்கு எதிராக உள்ள யாரோ இதைச் செய்திருக்கலாம். யாரோ ஒருவருடைய அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயல். மக்களின் உயிருடன் விளையாடுபவர்களை மன்னிக்கவே முடியாது.
இந்த ரயில் விபத்து பற்றி சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ரயில்வே துறையின் சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கவிழ்வதற்கு சிறிது நேரத்திற்கு முன் அந்த வழியாக 3 ரயில்கள் சென்றுள்ளன. எனவே நாசவேலையில் ஈடுபட்டவர்கள் ரயில்கள் செல்லும் நேரத்தை கண்காணித்து ஒரு சில நிமிடங்களுக்குள் தங்கள் சதிச்செயலை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
அது வெல்டிங் செய்யப்பட்ட ரயில் பாதை என்பதால், அகற்றுவதற்கு அந்த இடத்தில் தண்டவாளத்தை இணைக்கும் பிஷ் பிளேட்டுகள்' எதுவும் கிடையாது. எனவே அதை நீக்கி ரயிலை கவிழ்க்கவில்லை. தண்டவாளத்தின் ஒரு பகுதியையே நீக்கி தான் ரயில் கவிழ்க்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்த விபத்துக்கு நக்ஸல் அமைப்புகள் காரணமா என்ற கேள்விக்கு, மம்தா பதிலளிக்காமல் மழுப்பினார்.
விபத்துக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மேற்கு வங்காள அரசுக்கு உள்ளது என்றார் சுற்றிவளைத்து.
மம்தாவின் இந்தப் பேச்சுக்கு இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், இடதுசாரி கட்சிகளை நோக்கி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டை கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது, அசட்டுத்தனமானது.
தன்னுடைய குறைகளை மறைக்க அவர் இவ்வாறு பேசி வருகிறார். இதன் மூலம் மம்தா பானர்ஜி தனது உண்மையான குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கிறார் என்றார்.
இதற்கிடையே ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் கவிழ்க்கப்பட்டது குறித்து அதன் டிரைவர் டி.கே.தாஸ், மேற்கு வங்க மாநிலம் ஜர்கிராம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதற்கு அடையாளம் தெரியாத நபர்கள் காரணம் என்றும், ரயில் கவிழ்வதற்கு முன் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக டிரைவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications